வியாழன், 16 செப்டம்பர், 2010

பெண்கள், மந்திரவாதிகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இருவரும் எரிந்து சாம்பலாயினர்

2 மந்திரவாதிகள் எரித்து கொலை: 62 பெண்கள் கைது

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அடுத்த நலகொண்டா மாவட்டம் கைதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையா (70), சிமென்ட் பைப்கள் தயாரிக்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா (65), ஆடு மேய்ப்பவர். நண்பர்களான இருவரும் மந்திரம் மற்றும் செய்வினை செய்து வந்ததாக கூறப்படுகிறது
சமீபத்தில் கிராமத்தை சேர்ந்த சிலர் உடல்நலம் குன்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கு செய்வினைதான் காரணம் என கருதிய பெண்கள், இனிமேல் ஊருக்குள் எந்த மந்திரங்களும் செய்யக்கூடாது என இருவரையும் எச்சரித்துள்ளனர்.

அதை கேட்காமல் எல்லையாவும் நரசிம்மாவும் தொடர்ந்து செய்வினை, மந்திரம் செய்து வந்தார்களாம்.
இந்நிலையில், நேற்று கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் மந்திரவாதி எல்லையா மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழத்தை வைத்து மாந்த்ரீகம் செய்துள்ளார்.

இதைப் பார்த்த மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். வலிதாங்க முடியாமல் அலறிய எல்லையா, ‘நான் மட்டும் செய்யவில்லை, நரசிம்மாவும் சேர்ந்துதான் மந்திரம் செய்தோம்’ என்றார்.
இதையடுத்து, அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நரசிம்மாவையும் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் இருவரையும் கை, கால்களை கட்டி 2 கி.மீ. தூரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்றனர். “எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் ஊரை விட்டே சென்றுவிடுகிறோம்” என இருவரும் கதறினர்.
அதை ஏற்காத பெண்கள், மந்திரவாதிகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இருவரும் எரிந்து சாம்பலாயினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நலகொண்டா எஸ்.பி. ராஜேஷ்குமார் மற்றும் சாட்டப்பல் போலீசார் சென்று விசாரித்தனர். ‘எங்கள் கிராமத்துக்கு கேடு விளைவித்த 2 மந்திரவாதிகளை நாங்கள்தான் எரித்துக் கொன்றோம்’ என பெண்கள் கூறினர்.
இதையடுத்து 62 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: