வெள்ளி, 17 செப்டம்பர், 2010

EPRLF துரைரத்தினம்:வெளிநாட்டு கம்பனிக்கு காணிகளை வழங்க வேண்டாம்;

மேய்ச்சல் காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்க வேண்டாம்;  இரா.துரைரத்தினம் கிழக்கு முதலமைச்சருக்கு கடிதம்
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பகுதிகளை  வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்காக செங்கலடி, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி வவுணதீவு போன்ற போன்ற இடங்களை   பார்வையிடப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவருமான இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசப் பகுதிகளில் நீண்ட காலமாக அதிகமான காணிகளில் பெரும்பாலானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் கால்நடைகளாக பசு மாடுகள் 174,000 எருமை மாடுகள் 81,500 மொத்தமாக 255,500  கால்நடைகள் அண்ணளவாக உள்ளன.

கால்நடைகளின் மேய்சல் தரையாக காடுகள், மலைகள் அற்ற கிட்டத்தட்ட  75,000   மேற்பட்ட மேய்ச்சல் தரை காணிகள் தேவையாக உள்ளது.

இருந்தும்  கிட்டத்தட்ட 50,000  ஏக்கர் மேய்ச்சல் தரை காணிகளே  தற்சமயம் அளவை செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு  நடவடிக்கை எடுத்த அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அனைத்து அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், சங்கங்கள், அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னும் செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் 15,000 ஏக்கர் மேச்சல் தரைக்காணி தேவையாக உள்ளது. குறிப்பாக,
    1.அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நற்பட்டிமுனை,நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் மேய்ச்சல் தரை இல்லை. இதன் காரணமாக கால்நடைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தை நோக்கி நீண்டகாலமாக வந்து மேய்கின்றன.
    2 .பிரதேச செயலகப் பிரிவுகளான  வெல்லாவெளியில் 780 ஏக்கர்  பட்டிப்பளை பகுதியில் 5958 ஏக்கர் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில்   காணி இல்லாத காரணத்தால் மிகக் குறைந்தளவே காணியே மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
    3. அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நற்பட்டிமுனை, நாவிதன்வெளி, மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகப்பிரிவுகளான  வெல்லாவெளி, பட்டிப்பளை பகுதிக்கான கால்நடைகள்  சுமார் 75,000ஐ தாண்டும். இப்பகுதிக்கான கால் நடைகள் அனைத்தும் வவுணதீவு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளி தான் வழக்கமாக மேய்ச்சலுக்கு வருவதுண்டு.
    4. இவைமட்டுமின்றி சிலர் மேய்ச்சல் தரையில் மேட்டு நிலப்பயிர் செய்கையில்  காலத்திற்கு காலம் பயிர் செய்வது வழமை. இவர்களை உடனடியாக வெளியேற்றி இவர்களுக்கும் மேய்ச்சல் தரை அல்லாத காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.  இல்லாத பட்சத்தில் மாவட்டத்தில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினியை எதிர்நோக்குவர்.
    5.மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளில்   மலைகள், காடுகளும் உள்ளடங்கும்.
    6.விவசாய செய்கை அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் கால்நடை வளர்க்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். எனவே தனிப் பண்ணை முறையில் தான் மாடுவளர்க்க வேண்டியேற்படும். இதற்காக கால்நடை வளர்ப்போர் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் குறைந்தது  தலா 5 ஏக்கருக்கு மேல் மேய்ச்சல் தரைக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே வவுணதீவு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இன்னும் மேலதிகமாக 15000 ஏக்கருக்கு  மேற்பட்ட காணிகளை மேய்ச்சல் தரைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

இந்நிலையில் இது தொடர்பாக 2.8.2010 அன்று செங்கலடி பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் எமது பிரதேசவாசிகளுக்கு வழங்குவதற்கு காணி இல்லாத நிலையில் வெளியாருக்கு காணி வளங்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது. அப்படி முடிவெடுத்திருந்த நிலையில் 11.9.2010  விவசாயக் கூட்டத்திலும் இப்பிரச்சனை முன்வைக்கப்பட்டு அதிகமாக மேய்சல் தரைக்கு காணிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அதேதினம்  மாலை மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென தீர்மானித்த பகுதிகளை  வெளிநாட்டு கம்பனிக்கு வழங்குவதற்காக செங்கலடி, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி, வவுணதீவு கழிக்குளம் போன்ற பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில்  இடங்களை   பார்வையிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இப்பகுதிகளில் குறிப்பாக 1000 ஏக்கர் காணிகளை வழங்க முயற்சிகள் நடப்பதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் தவறானதாகும். இதனால் கால்நடைவளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்படுவர். எமது மாவட்டத்தில் உள்ள மக்கள் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சுய பொருளாதார வளங்கள் முடமாக்கப்பட்டு இன்னும் திட்டமிட்டவாறு அபிவிருத்தி வேலைகளிலும், சுயமுயற்ச்சிகளிலும், சுயதொழிலிலும், ஈடுபடுத்த முடியாமல் மெது மெதுவாக முயற்ச்சி செய்ய ஆரம்பிக்கும் வேளையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகம் எனும் போர்வையில் எமது இயற்கை வளமுள்ள சொத்துக்கள் சில தனிநபரின் நலன் கருதி விற்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. நாம் எதிர்காலத்தில் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதை வழங்க முற்படுகின்றவர்களுக்கு எமது வளத்தின் வலிமையும், சமூகத்தின் வலியும் தெரியாது என நினைக்கின்றேன்.  எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பேர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் கூடுதலாக தேவையான மேய்ச்சல் தரைகாணிகளை வழங்கநடவடிக்கை எடுக்குமாறும் மேய்ச்சல் தரை பகுதியில் காலத்திற்கு காலம் காணியில்லாமல் மேட்டு நிலப்பயிர்செய்யும்  காணிகள் அற்ற வறிய குடும்பங்களுக்கும் மேய்ச்சல் தரை அல்லாத காணிகளை பயிர் செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கமாறும் கேட்டுக்கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,  கால்நடை திணைகள உதவிப் பணிப்பாளர், வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி ஆகியவற்றின்  பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: