புதன், 15 செப்டம்பர், 2010

ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதற்காக இந்த எம்.பி பதவி மற்றும் இதர சொகுசுகளைக் கோரியிருந்தார்

கம்பஹா மாவட்டத்தைச் சேர்நத ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எம்.பி ஒருவர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அரசியலமைப்புத் திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல் நாள் ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இந்த எம்.பி ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரினார்.
இந்தத் தகவல் ஜனாதிபதிக்கு சென்றாலும் இதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதற்காக இந்த எம்.பி பதவி மற்றும் இதர சொகுசுகளைக் கோரியிருந்தார். ஆனால் ஏற்கனவே அரசுக்கு சுயேச்சையாக ஆதரவாக போதுமானளவு எம்.பிக்கள் இருந்தாலும் ஐ.தே.க.வின் சிரேஷ்ட பிரமுகர்களை கடைசி நேரத்தில் இழுத்துப் போடுவது  முறையல்ல என்பதாலும் பதவிகளை வழங்கி எடுக்குமளவுக்கு அவசரம் இல்லாத காரணத்தாலும் ஜனாதிபதி இந்த எம்.பியை சந்திக்க விரும்பவில்லை என்றாலும் அரசுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு இந்த எம்.பிக்கு வழங்கப்பட்டது.
இதே போல் ஐ.தே.க. தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ள புத்தளம் எம்.பி ஒருவர் அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்தார். இதற்காக புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை அவர் கோரினார். ஆனால் அந்தப் பதவியை அவருக்கு வழங்குவதை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் சிலர் ஆட்சேபித்தனர். இதனால் அந்த ஐ.தே.க. எம்.பியும் அரசுடன் இணைய முடியாமற் போயிற்று.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள குணசேகர எம்.பிக்கு கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியொன்றை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் செயலாளர் மைத்திபால சிறிசேனவை கேட்டிருக்கிறாராம்.
கடந்த வாரம் இரவு விருந்துபசாரமொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது குணசேகர எம்.பி அருகே சென்ற ஜனாதிபதி “எவ்வளவோ விட்டுக்கொடுப்புக்களை செய்து எதுவுமே கோராமல் எம்டன் இணைந்திருக்கிறீர்கள். நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்றார்.
“ஜனாதிபதி அவர்களே எனது ஊர் பொலன்னறுவை என்றாலும் நான் கண்டியிலிருந்தே எனது வியாபார நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். எனவே அங்கு எனது அரசியல் நடவடிக்கைகளையும் தொடர விரும்புகிறேன்’ என்றார் குணசேகர எம்.பி. உடனே கட்சியின் செயலாளரை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி “மைத்தி கண்டியில் ஒழுங்காகச் செயற்படாத அமைப்பாளர்களைப் பார்த்து அவர்களை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு குணசேகர எம்.பியை நியமியுங்கள்’ என்றார். ஜனாதிபதியின் பணிப்பின் படி இன்னும் இரண்டு வாரத்திற்குள் கண்டியில் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி அவருக்கு அமைப்பாளர் பதவி அவருக்கு கிடைத்துவிடும்.

கருத்துகள் இல்லை: