சனி, 22 அக்டோபர், 2011

அத்தனை நிதியொதுக்கீடுகளும் SLMC உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்- பசில் ராஜபக்ச

ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தனை நிதியொதுக்கீடுகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.நேற்று (20.10.2011) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவைரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், மற்றும் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி, கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் உட்பட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவதால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச்சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தனை நிதியொதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்கப்படுமென பொரளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இதன் போது உறுதியளித்ததாக பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மாகாண சபைகளில் ஆளும்கட்சியின் குழுக்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர்.

அத்தோடு அரசாங்க ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான ஒதுக்கீடுகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

அதே போன்று உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விஷேடமாக அமுல்படுத்தப்பட்டுவரும் கமநெகும திட்டத்திற்கான நிதியொதுக்கீடுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கமநெகும திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பத்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.

அந்த நிதியொதுக்கீடு இனிவரும் காலங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த சந்திப்பின் போது உறுதியளித்ததாக பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: