வியாழன், 20 அக்டோபர், 2011

முதல்வருக்கு இப்படியும் ஒரு ‘ஷார்ட்-கட்’ இருக்கிறதா?


பெங்களூரு, இந்தியா: உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கண்டம் காத்திருந்தது. 19ம் தேதி 2ம் கட்ட வாக்களிப்பு முடிந்து 24 மணி நேரத்துக்குள், சொத்துக் குவிப்பு வழக்குக்காக அவர் பெங்களூரு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பது கோர்ட் உத்தரவு.
இம்முறையும், அந்தத் தேதியில் ஆஜராகாமல் தவிர்க்க முயற்சி செய்கிறார் முதல்வர்! பாதுகாப்பு காரணம் ஒன்றைக் காட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் அவர். ஆஜராக வேண்டிய தேதிக்கு இரண்டே தினங்கள் உள்ளதால், இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துக் குவித்ததாக போடப்பட்ட இந்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். வழக்கில் தொடர்புடைய அனைத்துச் சாட்சிகளும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு விட்டனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கோர்ட் பக்கம் தலையைக் காட்டுவதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா தரப்பைப் பொறுத்தவரை, இந்த வழக்கு அவர்களுக்கு பாதகமான நிலையிலேயே உள்ளது. வழக்கு நடத்தி முடிக்கப்பட்டால், தீர்ப்பு இவர்கள் விரும்பும் வகையில் இருக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், வழக்கை முடிந்தவரை இழுத்தடிக்கிறார்கள் என்பது, பெங்களூரு கோர்ட் பியூனுக்கு கூட நன்றாகவே தெரியும்.
மற்றைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு என்ன நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றனவோ, அதையே இந்த வழக்கிலும் பின்பற்ற வேண்டும் என்பதே, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் வாதம். அவர் அதில் உறுதியாக உள்ளார். அவரது வாதம் நியாயமானது என்று ஏற்றுக்கொண்ட கோர்ட், வரும் 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெயலலிதா தரப்பினர், பாதுகாப்பை காரணமாகக் காட்டி ஒரு தடங்கலை ஏற்படுத்த முயன்றார்கள். ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பதால், பெங்களூரு கோர்ட்டுக்கு வருவது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஒரு மனு கொடுத்துப் பார்த்தனர்.
இவர்கள் எட்டடி பாய்ந்தால், பெங்களூருகாரர்கள் பதினாறு அடி பாயும் சூரர்களாக இருக்கிறார்கள். “பாதுகாப்புதானே வேண்டும். அருமையான பாதுகாப்பு கொடுக்கிறோம்” என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு, ஜெயலலிதா வந்தே தீர வேண்டும் என்றார்.
ஜெயலலிதா தரப்பு அடுத்தபடியாக, “நிஜமாகவே இவர்களால் தகுந்த பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்பது எமக்கு தெரிய வேண்டும். ஆதாரங்களைக் காட்டுங்கள்” என்று அடுத்த மனுவைத் தூக்கிப் போட்டது. அதற்கும் அசரவில்லை அவர்கள். நேற்று (திங்கட்கிழமை) நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடகா போலீஸ் டி.சி.பி., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கவுள்ள பாதுகாப்பு பற்றிய விபரங்கள் அடங்கிய ரிப்போர்ட்டை தாக்கல் செய்தார்கள்.
அதிலுள்ள விபரங்களைப் படித்துப் பார்த்த நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, “பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமே பக்காவாக உள்ளன. இந்தப் பாதுகாப்பை நம்பி ஜெயலலிதா தாராளமாக பெங்களூரு வரலாம். எனவே அவர் 20ம் தேதி கண்டிப்பாக பரப்பன அக்ரஹார சிறப்பு கோர்ட்டில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டு விட்டார்.
இனி என்ன செய்வது? ஒரு லாங்-ஷாட்டாக, “ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவுக்கு காண்பிக்கப்பட்ட பைல், எமக்கு வந்து சேரவில்லை. அது கையில் கிடைத்ததும், அதைப் படித்துவிட்டு வருகிறோம். அதுவரை கேஸை ஒத்தி வையுங்கள்” என்று இன்று மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த மனுதான் நாளைக்கு விசாரணைக்கு வருகின்றது.
குறிப்பிட்ட பைலை அவர்கள் ஒரே நாளில் சென்னைக்கு கிடைக்குமாறு அனுப்பிவிட முடியும். அப்படித்தான் செய்வார்கள். ஆனால், அதைப் படிக்க எமக்கு கால அவகாசம் தேவை என்று இவர்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தவிர, பைல் கன்னடத்தில் இருந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பு தருமாறு கேட்கலாம். (ஒருவேளை பைல் ஆங்கிலத்தில் இருந்தால், தமிழ் மொழிபெயர்ப்பு தருமாறுகூட கேட்கலாம்)
அதுவும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டால்?
ம்ம்ம்.. முதல்வர் போகவேண்டிய பாதையில் லேசாக ஒரு கலவரம், ‘செட்டப்’ கத்தி வீச்சு, அல்லது நாட்டு வெடிகுண்டு…. சேச்சே, நாமே ஐடியா கொடுக்கக் கூடாதுங்க.

• “விறுவிறுப்பு.காம்” ஸ்டைல் பிடித்திருக்கிறதா? நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யலாமே!

கருத்துகள் இல்லை: