வியாழன், 20 அக்டோபர், 2011

தனி விமானத்தில் பெங்களூர் செல்கிறார் ஜெ.வழக்கில் ஆஜராவதற்காக


சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அவர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைக்கு செல்கிறார். அங்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.

இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.அதில் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை. அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தரவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால் என்னால் இப்போது போக முடியாது. 2 வாரங்களுக்கு இதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசின் சார்பிலும், போலீஸ் டிஜிபி சார்பிலும் விரிவான பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தது.மேலும் இன்று குறிப்பிட்டபடி முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.

இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறார் ஜெயலலிதா. விமானம் மூலம் கிளம்பி பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையம் வரும் ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டுக்கு வருகிறார். காலை பத்தரை மணிக்கு கோர்ட்டுக்கு வரும் ஜெயலலிதா, 11 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.

ஜெயலலிதாவுக்காக விமான நிலையத்திலிருந்து கோர்ட்டுக்கு வரும் பாதை நெடுகிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: