புதன், 19 அக்டோபர், 2011

சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்


கிழக்குடன் கொழும்பை இணைக்கும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கோரிக்கைகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை ஒதுக்கியிருக்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளார்கள். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்று காரணம் கூறமுடியும்.

கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.

கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

இந்திய அரசாங்கத்தால் 100 மில்லியன் செலவில் ஆய்வுகூட உபகரண வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு நவீன முறையில் கிழக்கின் சித்த மருத்துவத் துறையானது வளர்ச்சிபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்த பீடம் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்படுவதானது. இந்த வளங்களை வீணாகக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் .

இலங்கையில் சித்த மருத்துவத்துறைக்குப் பெயர் போனது கிழக்கு மாகாணமாகும். கிழக்குப் பல்கலைக்ககத்தின் திருகோணமலை வளாகத்துடன் இயங்கும் சித்த மருத்துவத் துறையினால் சித்த மருத்துவர்கள் பெருமையுடன் இருக்கிறார்கள்.

சித்த மருத்தவத்துறை வளர்ச்சியடை வேண்டும், முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் இந்த கொழும்பு பல்கலைக்கழகத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தை இணைக்கும் செயற்பாடுகளை தவிர்த்தல் நல்லது.

இதன் பிரதிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு என்பனவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: