புதன், 19 அக்டோபர், 2011

ஜெயலலிதாவின் ‘Plan-B’ எனக்குதான் நன்றாக புரியும்” என்கிறார் கலைஞர்!

சென்னை, இந்தியா: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நாளை (வியாழக்கிழமை) ஆஜராக வேண்டிய நிலையில், அந்த வழக்கில் வாய்தா வாங்குவதற்காகவே திடீரென காவேரி விவகாரம் பற்றிப் பேசுகின்றார் என்று கூறியிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
குறிப்பிட்ட வழக்கில் ஆஜராகாமல் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா பலவித முயற்சிகள் செய்து வருகிறார். அது ஒன்றும் ரகசியமல்ல. அப்படியான நிலையில், கருணாநிதியின் குற்றச்சாட்டு ஓரளவுக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

காவேரி நீர் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும்” என்று கூறியிருந்தார். அவர் வழமையான ரூட்டீன் அறிவிப்பாக அதைக் கூறியும் இருக்கலாம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலை, ஜெயலலிதாவின் கூற்றை, பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்குடன் கனெக்ட் பண்ணுவதைத் தவிர்க்க முடியாது.
கருணாநிதி தனது அறிக்கையில், “காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும் என்று இப்போது ஜெயலலிதா திடீரென சொல்லியிருப்பது, அவர்மீது உள்ள சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்காகத்தான். இதைக் காரணம் காட்டி மற்றொரு வாய்தா வாங்க முடியுமா என்று முயற்சி செய்வதற்காகத்தான். அக்டோபர் 20-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுவும் அதுபோன்ற ஒரு முயற்சியே” என்று கூறியிருக்கின்றார்.
மிகவும் சாமர்த்தியமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டேட்மென்ட் இது. இதிலுள்ள இரண்டாவது பாதி நிஜம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால், முதலாவது பாதியும் நிஜமாக இருக்கலாம் என்ற நினைப்பை தோற்றுவிக்கும் விதத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதே சாமர்த்தியம்.
“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும்” என்ற ஜெயலலிதாவின் கூற்று, கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பது நிஜம். அதனால், ஒருவேளை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால், பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி ஜெயலலிதா கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு செல்வதைத் தவிர்க்கலாம் என்பதும் நிஜம்.
ஆனால், எதிர்ப்பு போராட்டங்கள் எந்தளவுக்கு நடைபெறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கால அவகாசம் மிகக்குறைவு. The chances are very slim.

• “விறுவிறுப்பு.காம்” வித்தியாசமாக இருக்கிறதா? உங்கள் ஆதரவு தேவை – நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை: