புதன், 19 அக்டோபர், 2011

பேரறிவாளன், சாந்தன் முருகன் பெஞ்ச் விசாரிக்க ஜேத்மலானி எதிர்ப்பு-உச்சநீதிமன்றம் ஏற்பு

டெல்லி: பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அங்கு விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க 3 பேர் கொண்ட பெஞ்ச் இன்று மறுத்து விட்டது. இந்த பெஞ்ச் விசாரணைக்கு 3 தமிழர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆட்சேபனை தெரிவித்ததை ஏற்று நீதிபதிகள் இந்த முடிவைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை ஏற்று சிங்க்வி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் 3 பேர் கொண்ட வேறு பெஞ்ச் முன்பு வழக்கு வந்தது.

இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த பெஞ்ச் விசாரிக்கக் கூடாது. தவறான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது என்று கூறினார்.

இதை 3 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பின்னர் ராம்ஜேத்மலானியுடன், இந்த வழக்குக்காக டெல்லிக்குப் போயிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியில் வந்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராம்ஜேத்மலானி அவர்களின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும். அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: