சனி, 22 அக்டோபர், 2011

லிபிய தலைவரின் மறைவு மனித சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

அணிசேரா நாடுகளின் அமைப்பின் பலம்வாய்ந்த அடித்தளமாக விளங்கிய லிபியாவின் தலைவர் கேணல் முஅம்மர் கடாபி நேற்றுமுன்தினம் கொல்லப்பட்டார்.
கடாபியை அழித்தால் தங்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தோன்றிவரும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்திய வாதசக்திகள் லிபியாவிலும் தலையிட்டு எவருக்கும் அச்சமின்றி இருந்துவந்த கேணல் கடாபியையும் இறுதியில் தங்கள் மோசடி வலையில் வீழ்த்தி அவரின் உயிரைப் பறித்துவிட்டனர்.
லிபியத் தலைவர் கேணல் கடாபி, இலங்கை போன்ற சிறியநாடுகளினதும், வறுமை நிலையிலுள்ள நாடுகளினதும் நண்பனாக விளங்கினார். அவர் இந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலும், நீண்டகாலக் கடன் அடிப்படையிலும் மசகு எண்ணெய்யை வேண்டியளவுக்கு விற்பனை செய்தும் உதவியளித்தும் இருக்கிறார். 1976ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட லிபியத் தலைவர் கடாபி, அந்த உச்சிமாநாடு மகத்தான வெற்றியீட்டுவதற்கு அன்றைய யூகோஸ்லேவியாவின் தலைவர் மார்ஷல் ரிட்டோவுடன் இணைந்து அம்மாநாட்டை நடத்துவதற்கான நிதியுதவியையும் தாராளமாக வழங்கினார். லிபியத் தலைவர் கடாபியின் மறைவு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இன்றி சுதந்திரமாக இருக்கவிரும்பும் லிபியா போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது.

கருத்துகள் இல்லை: