சனி, 22 அக்டோபர், 2011

கடாபி கதை முடிந்தது… அடுத்து வருகிறது உமது அத்தியாயம்!

Viruvirupu
டமாஸ்கஸ், சிரியா: “கடாபி போய்விட்டார். அடுத்தது உமது முறை வருகின்றது” என்ற கோஷம் இன்று உக்கிரமாக ஒலிக்கத் தொடங்கி இருப்பது, லிபியாவின் அல்ல, சிரியாவில்! மத்திய நகரமான ஹாமாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆயிரக் கணக்கான மக்கள், தமது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் குதித்தார்கள்.
தமது ஜனாதிபதிக்கு எதிராக அவர்கள் எழுப்பிய பிரதான கோஷம்தான், “கடாபி போய்விட்டார். அடுத்தது உமது முறை வருகின்றது”
சிரிய ராணுவம் தருவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டது. கலகக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட செய்தி வெளியானபோது உலகின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு உணர்வுகள் ஏற்பட்டன. இன்று சிரியாவில் ஏற்பட்டிருப்பது, மற்றைய நாடுகளில் ஏற்பட்ட உணர்வுகளைவிட வித்தியாசமானது. சிரியாவில் அரசுக்கு எதிராகப் போராடும் கலகக்காரர்கள், லிபியாவின் அடுத்த அத்தியாயம் தொடரப்போவது தமது நாட்டில்தான் என்பதை உணர்கிறார்கள்.
சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் கடந்த 7 மாதங்களாக நடைபெற்றாலும், கடந்த சில வாரங்களாக ஓரளவு அமைதி நிலவியது. ராணுவம் போராட்டக்காரர்களை துப்பாக்கி முனையில் சந்தித்ததால், கலகக்காரர்கள் அடங்கி விட்டார்கள் என்பது போன்ற ஒரு தோற்றம் அங்கு நேற்றுவரை காணப்பட்டது.
ஐ.நா.வின் கணிப்பின்படி சிரிய ராணுவம் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 3,000 பொதுமக்களை இதுவரை கொன்று விட்டது. அப்படியிருந்தும் போராட்டம் உச்சத்துக்கு செல்லாமல் இருந்த காரணம், அரசுக்கு எதிரான தரப்புக்கு சரியான தலைமையோ, திட்டங்களோ கிடையாது. மக்களின் எழுச்சி மாத்திரமே உள்ளது. அதை வழிநடத்த யாருமில்லை.
நேற்று கடாபி கொல்லப்பட்ட செய்தி வந்ததில் இருந்து போராட்டம் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடாத்தியதும், உலக நாடுகள் பல லிபிய ஆபரேஷனை ஆதரித்ததும், சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்கின்றது.
சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. விரைவில் ‘லிபிய ஸ்டைலில்’ கிளர்ச்சியாளர்களுக்கு வெளி உதவிகள் கிடைக்கத் தொடங்கலாம். லிபியாவில் கிளர்ச்சி அப்படித்தான் தொடங்கி, நேற்று கடாபியின் உயிரைப் பறித்ததுடன் முடிந்திருக்கிறது.
“கடாபி போய்விட்டார். அடுத்தது உமது முறை வருகின்றது” என்ற கோஷம் இன்று ஹாமா நகரில் வெளிப்படையாக ஒலித்தது. ஆனால் அதற்கு முன்னரே, வாஷிங்டனில் மறைமுகமாக கூறப்பட்டு விட்டது!

• “விறுவிறுப்பு.காம்” ஸ்டைல் பிடித்திருக்கிறதா? நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யலாமே!

கருத்துகள் இல்லை: