வெள்ளி, 21 அக்டோபர், 2011

சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது

 சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது
சென்னை, அக்.21 (டிஎன்எஸ்) சர்வேதேசத் திரைப்பட விழா சென்னையில் நேற்று (அக்.20) தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை, இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாடமி மற்றும் செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

அக்.20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவை, இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய வசந்தபாலன், "இந்தத் திரைப்பட விழாவை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் திரையுலகுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார். ஒரு தயாரிப்பாளராக படங்களைத் தயாரித்து பணம் சம்பாதிப்பதை மட்டும் குறுக்கோளாகக் கொள்ளாமல் சினிமா ஆர்வலர்களுக்கு அவர் செய்து வரும் இந்த அரிய பணி பாராட்டுக்குரியது.
என்னுடைய முதல் படமான ஆல்பம் தோல்வி அடைந்ததால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், இதுபோன்ற படவிழாக்களில் கலந்துகொண்டு, சர்வதேசப் படங்களைப் பார்த்து சினிமாவைப் பற்றிய என்னுடைய பார்வையை மாற்றிகொண்டேன். அதன் விளைவாகத்தான் தரமான, அதே சமயம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை கொடுக்க முடிந்தது. சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள சர்வதேசத் திரைப்படங்களைப் பார்ப்பது அவசியம்." என்றார்.

இவ்விழாவில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட கதையாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணான், நடிகை தன்ஷிகா, ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேசத் திரைப்பட ஒருங்கமைப்பாளர் குளோரியானா, தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ திரையரங்கில் நடைபெறும் இவ்விழாவில் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. (டிஎன்எஸ்)

கருத்துகள் இல்லை: