வெள்ளி, 21 அக்டோபர், 2011

தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’


குடிநீர்த்திட்ட நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ
நாட்டில் குறுகிய இனவாத அரசியலுக்கு தான் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தை இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும், யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்க சில அரசியல் தலைமைகள் முற்படுவதாகவும் அதற்கு இடமளிக்க முடியாத வகையில் அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்ற அமர்வு மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் காரணமாகவே அவர்கள் கலந்து கொள்ள வில்லை என கூறப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த பாரிய குடிநீர்த்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: