வெள்ளி, 21 அக்டோபர், 2011

அதிமுக அலையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் காணாமல் போன தேமுதிக


Vijayakanth
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.
மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் தேமுதிக 3வது மற்றும் 4வது இடத்தில்தான் உள்ளது. இங்கு வார்டுகளிலும் கூட தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

பேரூராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒரு இடத்திலும் தேமுதிக முன்னணியில் இல்லை. அதேசமயம் கவுன்சிலர் பதவியிடங்கள் ஓரளவு இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

தபால் ஓட்டுக்களிலும் கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை.

தேமுதிக வாக்குப் பிரிக்கும் கட்சியாகவே மீண்டும் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வாக்குகளை தேமுதிக எதுவும் செய்யவில்லை. மாறாக திமுகவின் வெற்றியைத்தான் இந்த முறை தேமுதிக பல இடங்களில் பாதித்துள்ளது. கடந்த காலங்களில், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைப் போட்ட தேமுதிக இந்த முறை அதிமுகவை விட்டு விட்டு திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: