வெள்ளி, 21 அக்டோபர், 2011

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜாவை கைது செய்ய உத்தரவு!

புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார்.
அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார்.
புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2007 ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான கால பகுதியில், அமெரிக்காவிலும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்ததாக இலங்கை சட்டமா அதிபர சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டனை பெறக் கூடிய குற்றத்தை செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: