புதன், 19 அக்டோபர், 2011

இறுதிக் காலத்தில் தியாகராஜ பகவதரை எம்.ஜி.ஆர் வாழவைத்தார்



எம்.கே. தியாகராஜபகவதர் என்ற தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற கதாநாயகனாக விளங்கிய நடிகர் தனது லட்சக்கணக்கான சொத்துக்களை இழந்து வீடு, வாசலின்றி நடைபாதையில் துன்பகரமான வாழ்க்கையை நடத்தி மாண்டு போனார் என்ற கதைகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று சமீபத்தில் தமிழ் நாட்டில் வெளியான ஒரு புதிய தகவலில் இருந்து தெரியவந்துள்ளது.
தியாகராஜபகவதர் நடிப்புலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த போது ஒரு 12 வயது சிறுவன் அவரை பார்ப்பதற்காக அவர் தற்காலிகமாக தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் இரண்டு நாட்கள் காத்திருந்தான். ஹோட்டல் மனேஜர் அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு தியாகராஜபகவதரை நேரில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தியாகராஜபகவதரை சந்தித்த அந்த சிறுவன் அவரது காலில் விழுந்து வணங்கி ஐயா நானும் உங்களைப் போன்று ஒரு பெரிய நடிகனாக விரும்புகிறேன் என்று கூறியபோது தியாகராஜபாகவதர் அவனது தலையைத் தடவி நீ முயற்சி செய்தால் உனக்கு என்னைவிட பெரிய நடிகனாக வரமுடியுமென்று ஆசிர்வதித்து அனுப்பினார். அந்த சிறுவன் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அந்த சம்பவத்தை அடுத்து புரட்சித் தலைவர் நாடகத்தின்மூலம் அறிமுகமாகி பின்னர் தென்னிந்தியாவின் பிரபல நடிகராகி புகழ் உச்சியில் இருந்த காலத்தில் அவரை சந்திக்க ஒரு வயோதிபர் இரண்டு நாட்கள் வெளியில் காத்திருந்து இறுதியில் நான் தியாகராஜபகவதர் உங்களை சந்திக்கவிரும்புகிறேன் என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அந்த மாளிகைக்குள் அனுப்பி வைத்தார்.
தியாகராஜபகவதரின் இந்த துண்டைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமடைந்த எம்.ஜி.ஆர். வேகமாக மாடியிலிருந்து இறங்கி தியாகராஜபகவதரை பார்த்தார். உடனடியாக அவருக்கு புதிய உடைகளையும் பணமுடிப்புகளையும் கொடுத்த எம்.ஜி.ஆர். ஐயா உங்களுடைய ஆசிர்வாதத்தினால் தான் நான் நடிப்புத்துறையில் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்று தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.
உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்று எம்.ஜி.ஆர். கேட்ட போது எனக்கு வாழ்க்கை நடத்துவதற்கு வழியில்லை என்று தியாகராஜபகவதர் கூறியிருக்கிறார். பரவாயில்லை உங்களுக்கு ஒரு வசதியான வீட்டை நான் எடுத்துத் தருகிறேன். மாதாந்தம் உங்கள் செலவுக்காக 2000 ரூபாவை அனுப்பி வைக்கிறேன் என்று கூறி எம்.ஜி.ஆர். தியாகராஜபகவதருக்கு விடை கொடுத்தார்.
அன்று முதல் தியாகராஜபகவதர் மரணிக்கும் வரை எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் எவ்வித பணப்பிரச்சினையுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தார். இதில் இருந்து கடைசி காலத்தில் தியாகராஜபகவதர் கஷ்டப்பட்டார் என்று வெளிவந்த கதைகள் தவறானது என்ற உண்மை இப்போது வெளிவந்திருக்கிறது.
1959 ஆண்டு நவம்பர் முதலாம் திகதியன்று தியாகராஜபகவதர் மரணிக்கும் வரை அவர் எம்.ஜி.ஆரின் பராமரிப்பிலேயே இருந்தார். தியாகராஜபகவதர் சிறந்த குரல்வளம் படைத்த ஒரு நடிகர். அன்று வெளிவந்த தமிழ் படங்கள் அனைவற்றிலும் தியாகராஜபகவதர் தனது சொந்தக் குரலில் பாடி தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்று புகழ் உச்சியில் திகழ்ந்தவராவார்.
நீல கருணாகரனே நடராஜா நீலகண்டரே.. என்று திருநீலகண்டர் படத்தில் பாடியபாடலும் நடிப்பும் அவரை தமிழ் திரையுலகில் புகழ் உச்சிக்கே கொண்டு நிறுத்தியது. தியாகராஜபகவதர் சத்திய சீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டன், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ், ராஜமுக்தி, அமரகாவி, சியாமலா, புதுவிழா, சிவகாமி ஆகிய 12 படங்கள் உட்பட மேலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
தமிழ் திரையுலகின் முதலாவது சுப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜபகவதர் ஒரு படத்தின் மூலம் லட்சக்கணக்கான பணத்தை திரட்டிய போதும் அவர் அந்தப் பணத்தை வங்கியில் வைப்பு செய்யவோ காணிகளை வாங்கவோ இல்லை. அவர் முழுப் பணத்தையும் தன் வசம் வைத்துக் கொண்டு பெண் தோழிகளுடன் கூத்தாடி பணம் முழுவதையும் கரைத்துவிட்டார் என்று தமிழகத்தின் அனுபவமிக்கவர்கள் கூறுகிறார்கள். இவரது படங்கள் தொடர்ச்சியாக ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை ஒரே திரைப்பட மாளிகையில் காணப்பிக்கப்பட்ட சாதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
1944ம் ஆண்டில் தியாகராஜபகவதர் மற்றும் கலைவானர் என்.எஸ். கிருஷ்ணர் ஆகியோர் மீது லக்ஷ்மி காந்தர் என்ற இந்து நேசன் பத்திரிகை ஆசிரியர் படுகொலை சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் 1947ல் இருவரும் விடுவிக்கப்பட்டனர். அதையடுத்து அவருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளும் குறைய தியாகராஜபகவதர் படிப்படியாக எதுவுமற்ற ஏழையானார். அப்போது அவருக்கு ஒருவருடைய உதவியும் கிடைக்கவில்லை. வறுமையில் வாடி வதங்கினார்.

கருத்துகள் இல்லை: