சனி, 22 அக்டோபர், 2011

தேமுதிக, பாமக, கம்யூனிஸ்டுகளை பின் தள்ளிய பாஜக!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் (municipal corporations) 89 நகராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. மீதி உள்ள 124 நகராட்சிகளில் அதிமுக 89 இடங்களை கைப்பற்றியுள்ளது.
திமுக 23 நகராட்சிகளையும், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை தலா 2 நகராட்சிகளையும், மதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
தேமுதிக-பாஜக-சிபிஎம் சமம்:
தேமுதிக பல்லடம் மற்றும் கூடலூரிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிவகங்கை, குழித்துறையிலும், பாஜக நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மதிமுக குளித்தலையிலும் வெற்றி பெற்றுள்ளது.
அனகாபுத்தூர், குமாரபாளையம், காயல்பட்டினம், நரசிங்கபுரம் மற்றும் போடி ஆகிய 5 நகராட்சிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
529ல் 300 பேரூராட்சிகளை பிடித்த அதிமுக:
அதே போல தமிழகத்தில் மொத்தமுள்ள 529 பேரூராட்சிகளில் (town panchayats) சுமார் 300 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
526 பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் அந்தக் கட்சி 287 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 119 பேரூராட்சிகளையும் காங்கிரஸ் 23 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளன.
பாஜகவை விட பின் தங்கிய தேமுதிக:
மிக ஆச்சரியமான விஷயமாக பாஜக 13 பேரூராட்சிகளையும், மதிமுக பேரூராட்சிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 பேரூராட்சிகளையும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக வெறும் 3 பேரூராட்சிகளையும், பாமக- இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை வெறும் 2 பேரூராட்சிகளையும் வென்றுள்ளன.
65 பேரூராட்சிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: