புதன், 19 அக்டோபர், 2011

சர்வதேச ரீதியில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு இலங்கைக்கு ஐரோப்பிய பொலிஸ் எச்சரிக்கை - பீரிஸ்

 சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது தொடர்பாக ஐரோப்பிய பொலிஸ் இலங்கைக்கு எச்சரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை பரிஸ் நீதிமன்றத்தில் அண்மையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 21 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010 ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டுக்கு சென்ற இலங்கை தூக்குழுவுக்கு ஏற்பட்ட செலவீனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேற்படி நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான பாதுகாப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தளர்த்தப்படமாட்டாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக்குழுவில் 30 பேர் அடங்கியிருந்ததாகவும் 49 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டதாகவும் தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாதுகாப்பு தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: