சனி, 22 பிப்ரவரி, 2020

மன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது


tamil.oneindia.com- Veerakumar :  டெல்லி: இந்தியாவைப் பற்றிய ஒரு உணர்ச்சிபூர்வமான கருத்தை உருவாக்க தேசியவாதமும் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கமும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
 "பாரத் மாதா யார்" என்ற புத்தகத்தின் கன்னட மொழிபெயர்ப்பு டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார், மன்மோகன்சிங். நேருவை ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளர் என்று வர்ணித்த அவர், இந்தியாவின் முதல் பிரதமர் இந்தியாவை நவீன தேசிய அரசாக வடிவமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தார் என்றார்.
இந்த புத்தகம் பண்டித நேருவை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், தேசத்தை கட்டமைக்கும் நாட்களில் நேரு பிரதமராக பதவி வகித்தவர். நமது நாடு அவர் தலைமையில், ஒரு ஜனநாயக வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டது, மாறுபட்ட சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு இடமளித்தது. இந்திய பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்ட நேரு, அதை ஒருங்கிணைத்து, ஒரு புதிய நவீன இந்தியாவை உருவாக்கினார்.

இந்த புத்தகத்தில் நேருவின் உன்னதமான புத்தகங்கள், அவரது உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது மிகவும் வெளிப்படையான சில நேர்காணல்களிலிருந்து குறிப்புகள் உள்ளன.
பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நேரு தொடங்கினார். நேரு மட்டும் இல்லாவிட்டால், இன்று உள்ள நிலையை, இந்தியா அடைந்திருக்க முடியாது. ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு பிரிவினர், நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி செய்தபடி இருக்கிறார்கள்.
நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு, நேருவை குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் அவர்கள். அந்த பொய் தகவல்களை வரலாறு ஏற்காது என்பதே எனது நம்பிக்கை. இப்போது இந்தியாவில், பல மில்லியன் மக்களை தவிர்த்துவிட்டு, தீவிரவாத சிந்தனையை வளர்க்க, தேசியவாதமும், 'பாரத் மாதா கி ஜெய்' கோஷமும், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்

கருத்துகள் இல்லை: