வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

அரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் - ஐகோர்ட் நாராயணசாமி கவலை

மாலைமலர்  :புதுவையில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி: புதுவையில் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சினை தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்-அமைச்சர்  நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவினர், துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தனர். அரிசி வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அவரிடம்  வலியுறுத்தினர். ஆனால் அந்த கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். இதுகுறித்து, ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை. மக்கள் தரமான அரிசியை வாங்கிக்கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உத்தரவிட்டனர். மேலும், ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தன

கருத்துகள் இல்லை: