ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஜி எஸ் டி ... நடுங்கி கொண்டே தமிழ்படங்கள் வரிசையாக வருகிறது .

ஜி.எஸ்.டி: வரிசை கட்டும் படங்கள்!
மின்னம்பலம் : ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதால் வெள்ளியன்று (ஜூன் 7) வெளியாக வேண்டிய படங்கள் ரிலீஸாகவில்லை. கடந்த வாரம் ரிலீஸான ‘இவன் தந்திரன்’ மற்றும் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது. இவற்றுடன் ஸ்ரீதேவியின் ‘மாம்’ படம் மட்டுமே ரிலீஸானது. இந்நிலையில் வரும் வெள்ளியன்று (ஜூன் 14) வரிசையாகப் படங்கள் வெளிவரவுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி காரணமாக தியேட்டர் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் இல்லை என்ற தகவல் வெளியாகி தயாரிப்பாளர்களைக் கவலையுறச் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து படங்கள் வரிசைக் கட்டியுள்ளன. ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி கிருஷ்ணாவின் ‘பண்டிகை’, அதர்வாவின் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, மற்றும் அசோக்செல்வனின் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ‘சாட்டை’ பட இயக்குநரின் ‘ரூபாய்’ படமும் அதே தேதியில் ரிலீஸாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பிரபுசாலமன் அறிவித்துள்ளார். இப்போட்டியில் விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ படம் இணையாமல் வரும் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி மற்றும் கேளிக்கை வரி போன்றவற்றால் டிக்கெட் விலை தாறுமாறாக எகிறியிருக்கும் வேளையில் ரசிகர்களிடையே இப்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்குமோ என்பதை எண்ணி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். கடந்த சில வருடங்களாகப் படத்தின் வசூலை விட வரிவிலக்கின் மூலம் கிடைத்த பணம் கூடுதல் லாபகரமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி வந்த பிறகு வரி விலக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் படத்தின் விலையிலிருந்து 30 சதவிகிதம் குறைவான விலையில்தான் படம் வாங்குவோம் என்கிறார்கள். இத்தகைய சூழலில் வெள்ளியன்று வெளிவரும் படங்கள் தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை: