புதன், 12 ஜூலை, 2017

Autism ஆட்டிசம் . .ஒரு புரியாத புதிய உலகம். அங்கு அறிவாளிகளும் இருக்கிறார்கள். வளர்ந்த குழந்தைகளும் வாழ்கிறார்கள்

Bamini Rajeshwaramudaliyar  :ஆட்டிசமும் என் மகனும் நானும்.
மீண்டும் மீண்டும் கதைத்ததை மீண்டும் கதைக்க, கூறிய பதிலை , பலமுறைகள் மீண்டும் சொல்ல எனது நாள் ஆரம்பமாகும். இதுதான் ஆட்டிசத்தின் தன்மை.
ஏன் அப்படி கதைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மகனின் மனதிற்கு ஆறுதல் கொடுத்து அமைதிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
ஆட்டுசம் உள்ளவர்களுக்கு -பதட்டமும்(Anxiety ), மாற்றங்களை விரும்பாத தன்மை உண்டு. -சமுதாயத்தை பற்றிய புரிந்துணர்வுகள் மிக மிக குறைவு.
-அவர்களின் ஐம்புலன்களும் (supper sensitive ) கூர் உணர்ச்சியுடையதாக இருக்கும்.
அவர்களுக்கு அனைத்து சத்தங்களும் (non stop)நிற்காது தொடர்ந்து ஒரே நேரத்தில் கேட்கும் போது, இரைவதுபோல் இருக்கும்.
காற்றின் சத்தம் கூட அவர்களுக்கு கேட்கும். அதனால்தான் காதை விரலால் அடைக்க முனைவார்கள்.
என் மகன் மற்றைய சத்தங்களை கேட்காமல் இருக்க , எந்த நேரமும் earphone போட்டு பாடல் கேட்டுக்கொண்டுருப்பார்.
அமைதியான இரவில் கூட அவர்கள் பலவற்றை உணர்வார்கள்.
இரவில் தெரியும் சிறிய வெளிச்சம் கூட அவர்கள் தூக்கத்தை கலைக்கும்.
அதனால் தூக்கம் குறைவாக இருக்கும். அதனால் பதட்டம் அதிகரிக்கும்.
இவற்றிற்கு எந்தப் பதிலும் கிடையாது.
இது அவர்களின் வாழ்க்கை.

அதனை புரிந்து அனுசரித்துப் போவது , எனது பாசமும் கடமையும் ஆகும்.
எனது மகன் (பார்தீபன்) தீபனின் வாழ்க்கைதான் என் வாழ்க்கை.
அவரின் (Time table ) நேர அட்டவணைதான் எனது அட்டவணை.
He is a busy man :-) அதனால்
சில நேரங்களில் மிகவும் களைத்துப் போய் விடுவேன். Too much driving.
அப்போது மீண்டும் மீண்டும் ஒரே விடையத்தை கதைக்கும் போது , அதே பதிலை மீண்டும் மீண்டும்கூறிய போதும் , எனது குரல் வழமைபோல் இல்லாவிட்டால், அவருக்கு திருப்தி வரும்வரை கிளிப் பிள்ளை போல் என்னிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பார்.
மன்னிக்க வேண்டும் களைப்பாக இருக்கிறது என்று நான் கூறினால்,
Sorry theepan good boy என்பார்.
அதனை நான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.
வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது
சில நேரங்களில் நான் மௌனமாக போய் விடுவேன். அப்போது என் முகத்தை பார்த்துவிட்டு who let the dog out என்ற பாடலை பாடுவார். அதற்கு நான் Woof woof என்று குரைக்க வேண்டும். அப்போதெல்லாம் சிரிப்பேன். என்னை சந்தோஷப்படுத்த எனது மகனின் யுத்தி இது :-) என்னை மீண்டும் கதைக்க வைக்கும் யுத்தியும் இது :-)
ஓட்டிசம் என்பது புரியாத புதிய உலகம். அங்கு அறிவாளிகளும் இருக்கிறார்கள். வளர்ந்த குழந்தைகளும் வாழ்கிறார்கள். சிலர் சாதாரண மனிதர்கள் போல் கதைப்பார்கள். சிலர் அப்படியல்ல. எனது மகனுக்கு limited language.
பார்ப்பதற்கு உருவம் சாதாரண ஆட்களை போல் இருக்கும்.
எப்போதும் யாராவது அவரின் குறைபாடு என்ன என்று கேட்டால், he has autism என்பேன். He is autistic என்று கூறுவதில்லை. காரணம் தீபன் என்ற இளம் மனிதருக்கு (condition)இந்த நிலை இருக்கிறதே அன்றி ,
'அவர் அது அல்ல'
தீபன் பாசமான, உதவி மனமுள்ள, அன்பை எதிர் பார்க்கும் இளம் பிள்ளை.
அன்பு என்பது பிரபஞ்சத்தின் பொது மொழி.
யாருக்கும் அது புரியும்.
மனிதரிடம், பிறப்பினால் அல்லது இடைவிட்டு வந்த குறைகளை மட்டும் காணாதீர்கள்.
அவர்களும் உணர்வுள்ள மனிதர்கள்
என்பதை மறவாதீர்கள்.
அன்பினை புரிய யாராலும்
முடியும்.
அன்பை காட்டுங்கள்.
மதித்து நடவுங்கள்.
ஆரம்ப காலத்தில், நான் பாவம் செய்தபடியால்தான் இப்படி பிள்ளை வந்தது என்றார்கள் சிலர்.
அவர்களுக்கு நான் கூறிய பதில்,
' நான் நல்ல பெண், நல்ல தாய் என்றபடியால்தான் , இறைவன் நம்பி என்னிடம் தந்தார். நல்ல காலம் உங்களிடம் தரவில்லை. வெட்கம் என்று வீட்டினுள் பூட்டி வைத்திருப்பீர்கள் ' என்றேன். :
நிறையை காணுங்கள் வளர்ந்த குழந்தைகளிடம்,
நிம்மதி மனதில் குடி கொள்ளும்.
Bamini Rajeshwaramudaliyar

கருத்துகள் இல்லை: