வியாழன், 13 ஜூலை, 2017

நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் சிக்கலில்?

நடிகர் திலீப் | கோப்புப் படம். tamilthehindu.com நடிகர் திலீப் | கோப்புப் படம்.< நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது.< திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை.
புதிய படங்கள்
கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார்.
நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்
இந்நிலையில் திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: