செவ்வாய், 11 ஜூலை, 2017

நிக்கோலா டெஸ்லா ரேடார், ரேடியோ,எக்ஸ் ரே,வாக்கும் ட்யூப் ஆய்வுகளின் முன்னேடி .. இன்று பிறந்தநாள்!


பூ.கொ. சரவணன் நிக்கோலா தெஸ்லா... செர்பியாவில் பிறந்த இவர்
எடிசனிடம் வேலைக்கு சேர்ந்தார். எடிசனின் ஆற்றல் குறைவான நேர்திசை மின்னோட்ட மோட்டாரை தான் சிறப்பாக மாற்றிக் காண்பிக்கிறேன் என சொல்ல, அவர் அப்படி செய்தால் ஐம்பதாயிரம் டாலர் தருவதாக சொல்ல... இவர் முடித்தபொழுது,"அது ஒரு ஜோக்!"என்றார். சம்பளத்தை கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற கோபமாக வெளியேறினார்.
மார்கோனி உருவாக்கிய ரேடியோ இவரின் பதினேழு காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டது. நேர்திசை மின்னோட்டத்தை (Direct current) எடிசன் பயன்படுத்தி மின்சார விநியோகத்தை செய்துகொண்டு இருந்தபொழுது மாறுதிசை மின்னோட்டத்தை (alternating current) உபயோகப்படுத்தி அதிக தூரம் மின்சாரத்தை மெல்லிய மின்கம்பிகளின் மூலம் கொண்டு செல்ல முடியும் என தீர்க்கமாக சொன்னார். அவ்வாறே எடிசனை விட்டுப்பிரிந்த பின் உருவாக்கி காட்டினார். இவர் சொன்னதை பொய் என்று நிரூபிக்க எடிசன் மாறு திசை மின்னோட்டத்தை நாய்கள் முதலிய விலங்குகளில் செலுத்தி அவை சாவதை காட்டி ஊரை பயமுறுத்தினார். அயனி மண்டலத்தில் இருந்து மின் சக்தியை எடுத்து உலக மக்கள் அனைவருக்கும் மின்சக்தியானது தண்ணீர் போல கிடைக்கச் செய்யலாம் என உறுதியாக சொன்னார்.

ரேடார், ரேடியோ,எக்ஸ் ரே,வாக்கும் ட்யூப் ஆகியவற்றில் முதலில் ஆய்வுகள் செய்த முன்னோடி இவர். உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கியதும் இவரே. ரிமோட் கண்ட்ரோல், நிலஅதிர்வு அளக்கும் கருவி என இவர் உருவாக்கியவை ஏராளம். இவர் தான் ஈட்டிய பணத்தையெல்லாம் ஆய்வுகளிலேயே செலுத்தினார். எந்த கண்டுபிடிப்பையும் பணமீட்டும் ஒன்றாக பார்க்காமல்,அவை மனிதகுலத்துக்கு எப்படி பயன்படும் என்றே யோசித்தார் இவர். இவருக்கும்,எடிசனுக்கும் நோபல் பரிசை கூட்டாக நோபல் பரிசு கமிட்டி தர முன்வந்த பொழுது இவருடன் இணைந்து அதைப்பெற எடிசன் மறுத்ததால் இருவருக்கும் நோபல் பரிசு கிடைக்காமல் போனது. சாகிறபொழுது கடனாளியாக டெஸ்லா இறந்து போனார். எளிய மக்களுக்காக சிந்தித்த மின்சார யுகத்தின் தந்தை இவரே. அவரை நினைவுகூரும் விதமாக காந்தப்புல அலகு அவரின் பெயரால் வழங்கப்படுகிறது.
(இன்று நிக்கோலா தெஸ்லா எனும் இணையற்ற விஞ்ஞானி பிறந்த நாள்.)

கருத்துகள் இல்லை: