வெள்ளி, 14 ஜூலை, 2017

பிகார் ஆட்சிக்கு ஆபத்து? ஐக்கிய ஜனதா தளம் உடைந்து விடும்: நிதிஷ் குமாருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அறிவுரை

tamilthehindu.com : நிதிஷ் குமார், லாலு பிரசாத் ஆகிய இருவருக்குமே முன்னர் நெருக்கமாக
இருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பிஹாரில் மகாக்கூட்டணிக்கு இருக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஐக்கிய ஜனதா தளம் உடைந்து போக வாய்ப்புள்ளது, எனவே நிதிஷ் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேக பேட்டியளித்த ராம்விலாஸ் பாஸ்வான், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய ஐக்கிய ஜனதா தளம் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது, ஆனால் ஆட்சிக்கு ஆதரவளிப்போர் நிதிஷ் குமாரை விட யாதவ்வுக்கு ஆதரவாக உள்ளனர் என்றார். “இந்த நிலைமை 3-4 மாதங்களுக்கு நீடித்தால் பெரிதாகி விடும். எனவே இதனை வளரவிடாமல் நிதிஷ் குமார் தடுக்க வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு இன்னமும் வெகுஜன ஆதரவு அடிப்படை உள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த போதே நான் இது இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று கூறினேன். ஏனெனில் ஒரு புறம் நல்லாட்சி என்ற ஹோதாவில் இறங்கியிருக்கும் நிதிஷ் குமார், மற்றொரு புறம் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்சியினர். இது இந்த கூட்டணியின் உள்ளார்ந்த சந்தர்ப்பவாதத்தை பறைசாற்றுகிறது. இருவேறு கொள்கைகள் உடையவர்களுக்கிடையே அரசியல் புரிந்துணர்வு ஏற்படலாம். ஆனால் இங்கு விவகாரம் வேறு விதமானது. அதாவது பதவிக்கு வருவது பிறகு பணம் சம்பாதிக்க அதை துஷ்பிரயோகம் செய்வது என்பதாக இருக்கிறது.
மகாக்கூட்டணி தொடங்கிய நாளிலிருந்தே இந்தப் பனிப்போர் இருந்து வருகிறது. மொகமத் ஷஹாபுதீன் தொடர்பான விவகாரம் எழுந்த போதே இத்தகைய பனிப்போர் ஏற்பட்டு இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் நிதிஷ் குமார் தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயக் கூட்டணி ஆதரவை நிதிஷ் கேட்டாலும் வரவேற்கிறோம்.
நிதிஷ் குமாரைப் புரிந்து கொள்வது கடினமான விஷயம். செஸ் ஆட்டத்தைப் பார்த்தீர்களென்றால் ஒவ்வொரு காயும் ஒவ்வொரு விதமாக ஆடும். இதில் நிதிஷ் குமார் குதிரைக்காய் போல் தன்னை நகர்த்திக் கொள்பவர்.
லாலு பற்றிக் கூற வேண்டுமென்றால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே மீண்டும் கூறுவேன், அவரது ஒரு கை உங்கள் கால்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு கை உங்கள் குரல்வளையில் இருக்கும். சூழ்நிலைகள் அவருக்குச் சாதகமாக இல்லாத போது அவர் உங்கள் காலின் கீழ் இருப்பார். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போது அவர் உறுதியுடனும் ஆதிக்க மனோபாவத்துடனும் செயல்படுவார். அதாவது அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியது போல.
பிஹாரில் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம், தேஜகூ இந்த விவகாரத்தில் காத்திருந்து செயல்படும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஒன்ற் மட்டும் உறுதி, 2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவிக்கு காலியிடம் இல்லை. மோடிதான் எங்கள் தலைவர், பிஹார் நிகழ்வுகளை பொறுமையுடன் அவதானித்து வருகிறோம்” என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

கருத்துகள் இல்லை: