வெள்ளி, 14 ஜூலை, 2017

மருத்துவ படிப்பு கனவை சிதைத்த நீட் தேர்வு!

Odisha Dalit girl scores 91% in matric exam, but collects sal seeds instead of studying in college
மின்னம்பலம் : மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் ஜூலை 14-ஆம் தேதி(இன்று) தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் ஜூலை 14-ஆம் தேதி(இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் சட்டம், சமத்துவம் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால், இதை தனித்துப் பார்க்கக்கூடாது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப் பட்டதால் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக கவலைப்படும் நீதிமன்றங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப் பட்டன. அவற்றில் 2279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90 விழுக்காடு இடங்களை இழப்பார்கள். இது எந்த வகையில் நியாயம்?
இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காதது தான். தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்விற்கு விலக்குப் பெற தவறிவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்துச் சாதித்திருக்கலாம். ஆனால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, தமிழக மாணவர் நலனைப் பினாமி அரசு காவு கொடுத்து விட்டது. இப்போதும் கூட காலம் கடந்துவிடவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் விலக்கு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது அல்லது, சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்படும் மேல்முறையீட்டில் சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்தி வெற்றி பெறுவதன் மூலமோ மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனைத் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: