சனி, 15 ஜூலை, 2017

சசிகலாவுக்கு சலுகை? தொலைகாட்சிகளில் டி ஐ ஜி ரூபா பெட்டி கொடுப்பது உள்நோக்கத்தில்?

ரூபாவுக்கு எச்சரிக்கை!மின்னம்பலம் : ‘சசிகலாவுக்குச் சிறையில் சிறப்பு சலுகைகள் தரப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா, தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தது தவறாகும். போலீஸ் அதிகாரிகளுக்கென சில விதிமுறைகள் உள்ளன. எனவே, இதுகுறித்து விளக்கமளிக்கும்படி டி.ஐ.ஜி. ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடகச் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்ற ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டு டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். அதில், சிறையில் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், இதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க பாஜகவினர் தூண்டுதலில் இவர் இப்படி பேசுவதாக சந்தேகம் எழுந்துள்ளது

இந்த நிலையில் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, இதற்காக உள்துறை மூத்த அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் பெங்களூருவில் நேற்று ஜூலை 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சிறையில் முறைகேடு நடப்பதாக டி.ஐ.ஜி. குற்றம் சாட்டியுள்ளார். சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதுபோலவே அரசின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு முன்பாகவே ரூபா ஊடகங்களில் பேசியது தவறானது.
மேலும், அவர் அடிக்கடி ஊடகத்தினரைச் சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ரூபா பேட்டி கொடுத்தது விதிமுறை மீறிய செயலாகும். எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: