செவ்வாய், 11 ஜூலை, 2017

சலீம் ஷேக் ..அமர்நாத் தாக்குதல்: 50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்!

அமர்நாத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல்
நடத்திய போது 50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் சலீம் ஷேக்கின் தைரியத்தைப் பாராட்டி ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அவருக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. பலதிசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிய ஓட்டுநர் சலீம் ஷேக் கடும் தைரியத்துடனும், சாதுரியத்துடனும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தை குஜராத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சலீம் ஷேக் ஓட்டினார். அவர் கூறியதாவது: நாங்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக பேருந்தை ஓட்டிச் சென்றேன். அந்த நேரத்தில் கடவுள்தான் எனக்கு தைரியத்தையும் பலத்தையும் கொடுத்தார். நான் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டினேன். குண்டு காயம் அடைந்த 7 பேரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. எனினும் 50 பேர் பத்திரமாக உயிர் தப்பினர், என்றார்.

ஒன்றுமே புலனாகாத மையிருட்டில் தாக்குதலையும் மீறி நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார் சலீம் ஷேக். ராணுவ முகாமைச் சென்றடைந்தவுடன் தான் பிரேக் போட்டுள்ளார்.
ஓட்டுநரின் தன்னலமற்ற இந்தத் தைரியத்தைப் பாராட்டி ஜம்மு காஷ்மீர் அரசு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்க, அமர்நாத் யாத்திரை வாரியமும் ரூ.2 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
“நான் துப்பாக்கிக் குண்டு படாதவாறு குனிந்தபடியே வண்டியை ஓட்டினேன். பஸ் உரிமையாளர் மீது 3 தோட்டாக்கள் பாய்ந்தது.
உரிமையாளர் கூறும்போது, “பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென பட்டாசு வெடிப்பது போல் சப்தம் கேட்டது. உடனேயே தீவிரவாதிகள் தாக்குகின்றனர் என்பதை உணர்ந்தோம். நான் ஓட்டுநர் ஷேக்கை பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டுமாறு கூறினேன். 2 கிமீக்கு பிரேக்கை பிடிக்காமல் ஓட்டி ராணுவ முகாம் வந்த பிறகே நிறுத்தினார்” என்றார் உரிமையாளர் ஹர்ஷ் தேசாய்” tamilthehindu.com

கருத்துகள் இல்லை: