திங்கள், 14 ஜூன், 2010

சிதம்பரம் முதல்வரிடம் விளக்கினார் ,் இந்திய- இலங்கை ஒப்பந்தங்கள்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
சென்னை, ஜூன் 13: முதல்வர் கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.   இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வந்திருந்தபோது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி முதல்வரிடம் கூறியதாக சிதம்பரம் தெரிவித்தார்.   முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது.   இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதற்கு முன்பு ஜூன் 6-ம் தேதி இருவரும் சந்தித்துப் பேசினர்.   இலங்கையில், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து இலங்கை குழுவிடம் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.   இந்த கோரிக்கைகள் குறித்து இலங்கை அரசை வலியுறுத்துமாறு, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.   மேலும், ராஜபட்சவை சந்திக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவையும் முதல்வர் அனுப்பி வைத்தார். அக் குழுவினர், ராஜபட்சவை சந்தித்து முதல்வரின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.   இந்திய அரசுடன் சில ஒப்பந்தங்களில் இலங்கை குழுவினர் கையெழுத்திட்டனர். அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தர இந்தியா நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அதில் அடங்கும்.   இதனிடையே, ராஜபட்ச தலைமையில் வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (ஜூன் 14) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை குழுவின் பயணம் நிறைவுற்று அனைவரும் கொழும்பு திரும்பிவிட்டனர்.  சிவகங்கை அருகே சனிக்கிழமை கல்லூரி விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்தியாவைப் போல இலங்கையிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம் உருவாக்கி, தமிழர்களுக்கு எல்லா அம்சங்களிலும் சம உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவில் ஆட்சியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது என்று கூறினார்.   இப்போதும் அதே பாதையில் ஒரு தீர்வை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.   ராஜபட்ச கொழும்பு திரும்பிவிட்ட நிலையில், அவரின் தலைமையிலான குழுவினருடன் இந்திய குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் கருணாநிதியுடன், அமைச்சர் சிதம்பரம் பேசியதாகத் தெரிகிறது. "டக்ளஸ் மீதான வழக்கு பற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை' இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பத்திரிகைகள் மூலம்தான் தமக்கு தெரிய வந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.   சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.   இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பு அளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:   டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி அதிகாரபூர்வ தகவல் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்து கொண்டேன். இதுகுறித்த நீதிமன்ற தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.   விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அப்படிக் கருதவில்லை என்றும், எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார். இச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: