திங்கள், 22 நவம்பர், 2010

வெளிநாடுகளிலிருந்து வரும் சஞ்சிகைகளை உடனுக்குடன் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் சுங்கப் பணிப்பாளருக்கு அரச தகவல் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு

எம்.ஏ.எம்.நிலாம்:"எக்கோனமிஸ்ட்' சஞ்சிகை உட்பட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் சகல சஞ்சிகைகள், பத்திரிகைகளையும் இனிமேல் விமான நிலையத்தில் தடுத்து வைக்காமல் உடனுக்குடன் எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் விமான நிலைய சுங்கப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த காலங்களில் "எக்கோனமிஸ்ட்' சஞ்சிகை உட்பட முக்கியமான ஆங்கில பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிநாடுகளிலிருந்து விமானநிலையம் வந்தடைந்ததும் சுங்க அதிகாரிகளின் சோதனைக்குட்படுத்தப்பட்டே விடுவிக்கப்படுகின்றன. சிலவேளைகளில் இலங்கை தொடர்பான விவகாரங்கள் அவற்றில் காணப்பட்டால் அந்தப் பக்கங்கள் கிழிக்கப்பட்டே விடுவிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமன்றி தமிழ் நாட்டிலிருந்து வரும் தமிழ் சஞ்சிகைகள், பத்திரிகைகள் கூட இந்த கட்டுப்பாட்டிலே விடுவிக்கப்படுகின்றன. இது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக அதனைக் கவனத்திலெடுத்த அரசு எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையை தளர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பிரகாரமே தகவல் பணிப்பாளர் நாயகம் சுங்கப் பணிப்பாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விமானநிலைய பொதிகள் பகுதிக்கு வரும் சகல பத்திரிகை, சஞ்சிகைகளையும் சோதனைக்குட்படுத்தாமல் அவற்றை தாமதமின்றி விடுவிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இலங்கை தொடர்பான விவகாரங்கள் காணப்படும் பட்சத்தில் இது குறித்த நடவடிக்கைகளை அரச தகவல் திணைக்களம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை: