வெள்ளி, 3 மே, 2019

குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ராணுவம்!

மின்னம்பலம் : குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ராணுவம்!இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படுகிற நபர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கே பயிற்சி எடுத்திருக்கலாம் என்று நம்புகிறோம் என்று இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.
இன்று (மே 3) பிபிசி செய்தியாளர் செகுந்தர் கர்மனிக்கு அளித்த பேட்டியில் இலங்கை ராணுவத் தளபதி சொல்லியிருப்பதை இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படுவர்களில் சிலர் இந்தியாவின் கேரளா, பெங்களூரு, காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.
பயங்கரவாத பயிற்சி எடுப்பதற்காகவே அவர்கள் அங்கே பயணித்திருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ராணுவத் தளபதி.
மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்த்திய அனைவரும் கைது செய்யப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ விட்டார்கள். ஐஎஸ் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் சதியும் இதில் அடங்கியுள்ளது.
இலங்கை கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறது. இதில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெற்றி பெற்றோம். கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை மக்கள் அதிக அளவு சுதந்திரத்தையுயும், அதிக அளவு அமைதியையும் அனுபவித்து வருகிறார்கள். அந்த சுதந்திர உணர்வில் நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட மறந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் இலங்கை ராணுவத் தளபதி.

கருத்துகள் இல்லை: