புதன், 1 மே, 2019

இலங்கை: இஸ்லாமிய தொலைக்காட்சிக்குத் தடை!

இலங்கை: இஸ்லாமிய தொலைக்காட்சிக்குத் தடை!மின்னம்பலம் : இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளைக் குறிவைத்து இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கொடூரங்களை உள்ளூர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் ஐஎஸ் அமைப்போடு இணைந்து நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை ஊக்குவிக்கும் டிவி சேனல்களை தடை செய்வதென முடிவெடுத்த இலங்கை அரசு, இதுபற்றி டயலாக், எஸ்.எல்.டி. ஆகிய நாட்டின் முக்கிய கேபிள் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து துபாய் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் நடத்தும், ‘பீஸ் டிவி’ நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஜாஹிர் நாயக்கின் மதப் பிரசாரங்களுக்கு இந்தியா, பங்களா தேஷ் ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது இலங்கையும் ஜாஹிர் நாயக்கின் சேனலுக்கு தடை விதித்திருக்கிறது.
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவில் என்.ஐ.ஏ. கைது செய்த ரியாஸ் அபுபக்கர் என்பவரிடம் ஜாஹிர் நாயக்கின் வீடியோக்கள், இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரியாக கருதப்படும் ஜஹ்ரன் ஹாஷிமின் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்நிலையில்தான் இலங்கையில் ஜாஹிர் நாயக்கின் சேனல் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி இலங்கை அரசின் அதிகாரபூர்வ உத்தரவு எதுவும் வரவில்லை எனினும் நாட்டின் முக்கிய கேபிள் நிறுவனங்களின் ஒளிபரப்புப் பட்டியலில் இருந்து பீஸ் தொலைக்காட்சி அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாதிகள் முகத்தை மூடிக் கொண்டு உலவுவதற்கு புர்காவை பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலின் பேரில் இலங்கையில் முகத்தை முழுதாக மூடி புர்கா அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கொழும்பு கத்தோலிக்க ஆர்ச் பிஷப் மால்கம் ரஞ்சித்தின் பாதுகாப்புக்காக குண்டுதுளைக்காத கார் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முன் வந்த நிலையில் ஆர்ச் பிஷப் அதை மறுத்துவிட்டார்.
”வழிபாட்டுத் தலங்களில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை வழிபாட்டுத் தலங்கள் அல்ல. வெறும் இடங்கள்தான்., அங்கே இறைவன் இருக்கமாட்டார்” என்று பிஷப் சொல்லியிருந்தார். இதை ஒட்டி அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எச்சரிக்கையில் அரசு அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்க முன் வந்தது.
ஆனால் பிஷப்போ, “எனக்குப் பாதுகாப்பு இறைவன் தான். என்னை விட எமது மக்களுக்கும் எமது நாட்டுக்குமே பாதுகாப்பு தேவை” என்று கூறியிருக்கிறார்

கருத்துகள் இல்லை: