சனி, 4 மே, 2019

3ஆம் கட்ட தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு... யாருக்கு வெற்றி?

மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றும் என்று 3 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியாகியுள்ள சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத்தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. மே 6ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 19ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும், மே 23ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இனி நடக்கப்போகும் 3 கட்டத் தேர்தலிலும் இந்தி பேசும் மக்கள் வாழ்கிற மாநிலங்களில் வருகிற மக்களவைத் தொகுதிகளே அதிகளவில் உள்ளன. இதனால் அடுத்த 3 கட்ட தேர்தலும் பாஜக- காங்கிரஸ் இடையிலான நேரடிப் போட்டியைக் கொண்ட தேர்தலாகவே இருக்கும்.
இந்நிலையில் முதல் 3 கட்ட வாக்குப்பதிவுக்கு பிந்தைய வெற்றி வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ளது. அரசியல் சாராத இந்த நிறுவனமானது பல்வகைப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமாகவும் உள்ளது.

சமூக ரீதியான, பொருளாதார ரீதியான பல்வேறு ஆய்வுகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. தற்போது 3 கட்ட தேர்தலுக்குப் பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை மாநில வாரியாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 191 இடங்களிலும், மற்ற கட்சிகள் 146 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
வட மாநில நிலவரம்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டியது தேசிய கட்சிகளுக்கு அவசியம் வாய்ந்ததாக உள்ளது. கடந்தமுறை இந்த 6 மாநிலங்களிலும் உள்ள 154 தொகுதிகளில் 142 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. இது கடந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற இடங்களில் (283) சரிபாதியாகும். ஆனால் இம்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இம்முறை குறைவாகவே வெற்றி பெறும் என்று CSEPR ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது.
இமாசலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளில் பாஜக கூட்டணி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல உத்தராகண்டில் உள்ள 5 தொகுதிகளில் பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியிலும், ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இந்த 154 தொகுதிகளில் இம்முறை பாஜக 70 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாநில நிலவரம்

தென்மாநிலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, பாஜக கூட்டணி 5 தொகுதிகளையும், திமுக காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளையும் வெல்லும் என ஆய்வு கூறுகிறது. மற்ற தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் பாஜக கூட்டணி 13 தொகுதிகளையும், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 15 தொகுதிகளையும் வெல்லும். கேரளாவில் பாஜக கூட்டணி 1 தொகுதியையும், காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளையும், தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் தலா ஒரு தொகுதியையும் ஆந்திராவில் இரு கட்சிகளும் ஒரு தொகுதியைக் கூட வெல்லாது எனவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல, குஜராத்தில் பாஜக கூட்டணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி 34 தொகுதிகளிலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளிலும், பிகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 23 தொகுதிகளிலும், ஜார்கண்டில் பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 10 தொகுதிகளிலும் வெல்லும் என ஆய்வு கூறுகிறது.
ஆட்சியமைப்பது யார்? தீர்மானிக்கப்போகும் பிராந்தியக் கட்சிகள்

இந்த ஆய்வறிக்கையின்படி பார்த்தால் ஆட்சியமைக்க தேவையான 273 இடங்களை பாஜக கூட்டணியோ அல்லது காங்கிரஸ் கூட்டணியோ பெறாது. பிராந்தியக் கட்சிகள்தான் யார் ஆட்சியமைக்கப் போகும் சக்தியாக இருக்கப்போகிறார்கள் என்பதை முடிவு செய்யும். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 47 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 15 இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 20 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 5 இடங்களிலும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 14 இடங்களிலும், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது இந்த ஆய்வறிக்கையின் முடிவாக உள்ளது.

கருத்துகள் இல்லை: