சனி, 4 மே, 2019

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்... வெளியே செல்ல வேண்டாம்

nakkheeran.in - paramasivam- ramkumar :வெயிலின் உட்சபட்ச நகரமான அக்னி நட்சத்திரம் இன்று காலை துவங்கியது.
நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தற்போது மார்ச் முடிந்து ஏப்ரலில் அதன் வீரியம் 102 டிகிரியானது. தற்போது மே மாத ஆரம்பத்தில் உஷ்ணம் 103 டிகிரி என்று உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வரை வெயிலின் உஷ்ணம் இருந்ததால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மாலை நேரத்தில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இருப்பினும் புழுக்கம் இரவிலும் நீடித்தது. ஆனாலும் மே மாத தொடக்க தினத்திலிருந்தே வெயில் கொளுத்தத் தொடங்கியது. இதனிடையே கத்திரி வெயில் எனப்படுகிற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.

அது வருகிற 29ம் தேதி வரை சுமார் 25 நாட்களுக்கு நீடிக்கும். அதுவரையிலும் வெயிலின் உஷ்ணத்தின் அளவுகோல் தொய்வின்றி வளர்ந்து அதே அளவில் நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக ஜோதிட பஞ்சாங்க ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  நேற்றைய நிலவரப்படி நெல்லையில் வெயிலின் அளவு 103 டிகிரி. மேலும் அக்னி நட்சததிரத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் வெளியே செல்ல வேண்டாம். தாக்கத்தை எதிர் கொள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அதிகமாக நீர் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.<

கருத்துகள் இல்லை: