வியாழன், 2 மே, 2019

BBC : இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி பி.பி.சி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை பாதுகாப்பு பிரிவினர், உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கான கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றமையே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டமொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.30 வருட கால யுத்தத்தின் போது இலங்கையில் காணப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த 10 வருடங்களில் தளர்த்தப்பட்டமையும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் வன்னி நிலப்பரப்பை ஆட்சி செய்யும் போது, அங்குள்ளவர்கள் தொடர்பிலும், திடீர் செல்வந்தர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தியதாக குறிப்பிட்ட முன்னாள் போராளி க.துளசி, இலங்கையில் கடந்த காலங்களில் திடீர் செல்வந்தர்களான தரப்பினர் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் செயற்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.


இலங்கையில் திடீர் செல்வந்தர்களான பலர் இருப்பதாகவும், அவர்களிடம் தற்போதேனும் விசாரணைகளை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்தும் புலனாய்வு துறையினர் விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஏழ்மை நிலையில் இருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள், தற்போது பாரிய செல்வந்தர்களாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு இலங்கை ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்மை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததாக க.துளசி குறிப்பிட்டார்.
இலங்கை ராணுவத்தினர் கோரிக்கையை தாம் ஏற்று செயற்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தமக்கு பாரிய அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.அதனால், இலங்கை எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கான உதவிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தம்மிடம் கோரும் பட்சத்தில், அதனை உரிய வகையில் செய்ய தாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளி துளசி தெரிவித்தார். யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை ராணுவம் சிறுபான்மையினரை தமக்காக பயன்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், அவ்வாறு பயன்படுத்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் நினைவூட்டினார்.
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தாம் எதிர்நோக்க தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு யுக்திகளை, இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயார் என அவர் உறுதியளித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவங்கள் அத்தியாவசியமானது எனவும் அவர் பி.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு தாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமக்கு தோற்றம் பெற்றுள்ளதாகவும் துளசி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: