ஞாயிறு, 16 டிசம்பர், 2018

5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது. கலைஞர் சிலை திறப்பு விழா

அண்ணா அறிவாலயத்திற்குள் 5 தொலைக்காட்சிகளின் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரை பிடித்து விசாரணை-
karunanidhi statue inauguration fake reporter arrested - கருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைதுtamil.indianexpress.com : மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் இவ்விரண்டு சிலைகளும் திறக்கப்பட உள்ளன. கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
நேற்று பிற்பகலில் தான், ராகுலும் கூட்டத்தில் பங்கேற்க போகும் தகவல் வெளியானது. கடைசி நேரத்தில் ராகுலின் பயணத் திட்டம் திடீரென முடிவு செய்யப்பட்டது.

சோனியா- ராகுல் ஆகியோர் இன்று மாலை 4.30 மணிக்கு ஒரே விமானத்தில் சென்னை வருகிறார்கள். கிண்டி நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
சோனியா – ராகுல் வருகையையொட்டி சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலையிலேயே அண்ணா அறிவாலயம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலை திறக்கப்படும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போலீசாரோடு ஒருங்கிணைந்து டெல்லி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சோனியாவும், ராகுலும் டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பி தற்போது வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்திற்குள் 5 தொலைக்காட்சிகளின் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரிடமிருந்து 5 பிரபல தொலைக்காட்சிகளின் போலியான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில், போலி அடையாள அட்டைகளுடன் மர்ம நபர் நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை, தனி இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: