திங்கள், 17 டிசம்பர், 2018

கலைஞர் பாணியில் கமல்நாத்

கலைஞர் பாணியில் கமல்நாத்மின்னம்பலம் : மத்திய பிரதேசத்துக்கு கமல்நாத், ராஜஸ்தானுக்கு அசோக் கெலாட், சத்தீஸ்கருக்கு பூபேஷ் பாகெல் என காங்கிரஸ் முதல்வர்கள் இன்று டிசம்பர் 17 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். மூன்று முதல்வர்களின் பதவியேற்பு நிகழ்விலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோடு திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்றார்.
ஜெய்ப்பூர் ஆல்பர்ட் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 17) காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில், அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து துணை முதல்வராக சச்சின் பைலட் பொறுப்பேற்றுக் கொண்டார். விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று பிற்பகல் போபால் ஜம்பூரி திடலில் இன்று (டிசம்பர் 17) நடைபெற்ற விழாவில், மத்திய பிரதேசத்தின் 18ஆவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் கமல்நாத். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவியேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவர் சரத் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் மற்றும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா முடிந்தது எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது இரு கைகளையும் கோர்த்து உயர்த்தி மக்களை நோக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மபிக்கு வழிகாட்டிய கலைஞர்
காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்களை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற கமல்நாத், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பிற்கு தனது முதல் கையெழுத்தை இட்டார். இதன்மூலம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்று வாக்குறுதி அளித்தது. திமுக அப்போது வென்று கலைஞர் முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இந்த வகையில் மத்திய பிரதேசத்துக்கு வழிகாட்டியாய் விளங்கியிருக்கிறது தமிழ்நாடு.
சத்தீஸ்கரில் இடம் மாறிய பதவியேற்பு விழா
சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் பதவியேற்பு விழா கடும் மழையால் தாமதமானது. முன்னதாக ரெய்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடும் மழை காரணமாக நிகழ்வு பாலிபிர் இண்டோர் ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டது. பதவியேற்பு நிகழ்வில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: