சனி, 22 டிசம்பர், 2018

அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்

சவுக்கு : சில சமயங்களில் உண்மையின் தீவிரமானது வாயை அடைத்துவிடக்கூடும். இந்தி ராஜ்ஜியங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்வியால் கட்சித் தலைவர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடியை விட அதிகமாக அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் என்று கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். கடந்த செவ்வாயன்று வெளியான தேர்தல் முடிவுகள் பற்றி பாஜக தலைவர் இதுவரை பேசவும் இல்லை, ட்வீட் செய்யவுமில்லை. மாறாக, வெற்றிக்கான வாழ்த்துச் செய்தியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு மோடி அனுப்பி வைத்தார்.
பாஜகவின் தலைவராகச் சில ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றதும் தனது இருப்பிடத்தை தில்லிக்கு மாற்றிவிட்ட தேர்தல் ‘மேலாளர்’ ஷா மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிவிட்டதுடன் மக்கள் ஆதரவு பெற்ற பெரும் தலைவராகவும் முயற்சித்துவருகிறார். ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சியின் அடையாளமாக தேர்தல் பேரணிகளில் மோடிக்கு அடுத்து அதிகம் பேசுவது ஷா மட்டுமே. பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த 3 மாநிலங்களிலும் பிரதமரை விட அதிக எண்ணிக்கையிலான பொதுக்கூட்டங்களில் அமித் ஷா பேசியிருக்கிறார். தனது தலைமையில் கட்சி மூன்றில் 2 மாநிலங்களிலாவது (மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும்) நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஒரு கனவிலிருந்த அவருக்குப் பேரதிர்ச்சிதான் கிட்டியது.

மோடிக்குப் பின் 2024ஆம் ஆண்டு முதல் கட்சியையும் ஆட்சியையும் ஷாவே பார்த்துக்கொள்வார் என்ற பேச்சும் உலவியது. அடுத்த 50 ஆண்டுகள் வரை நாட்டை பாஜக ஆளும் என ஷா மார்தட்டினார். நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பேசிய ஷாவிடம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் பிரதமராகும் திட்டம் பற்றி நிருபர்கள் கேட்டபோது அவரது எளிய பதில் “கட்சிக்குள் சீனியர் தலைவர்கள் பலர் இருக்கின்றனர்,” என்பதே. ராஜதந்திரமாகப் பதிலளிப்பதற்கு இந்த நவீன சாணக்கியருக்குச் சொல்லியா தர வேண்டும்!
ரஃபேல் போர் விமான பேர விஷயத்தில் நாட்டையும் பிரதமரையும் அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்ற பாஜகவின் கோரிக்கைக்குப் பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பை இந்த விஷயத்தில் நடக்கும் அரசியல் சொல்லாடலில் குறுக்கீடாகவே விஷயமாகவே காங்கிரஸ் பார்த்தது. நடப்பவற்றைச் சரியானபடி வெளிக்கொண்டு வருமாறு ஊடகத்தினரிடம் காங்கிரஸ் புள்ளி அகமது படேல் கூறினார்; இந்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையை நாடாளுமன்ற் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்தது என்று அரசு தவறாகக் கூறினால் அது வேண்டுமென்றே ஊடகத்தில் வராமல் போய்விடக்கூடும் என்று அவர் அஞ்சினார்.
காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லாவிடம் அவர் நடத்தும் தொலைக்காட்சி சேனலில்லாவது இச்செய்தி சரியாகக் காட்டப்படுவதை உறுதி செய்யுமாறு படேல் கூறினார். பாஜக ஆதரவு சேனல்களிலிருந்து மாறுபட்ட சேனலை நடத்தி வரும் சுக்லா “கான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட எனக்கு டிக்கெட் கிடைக்குமென உறுதிமொழி தாருங்கள். பின்னர் என் சேனலை 24 மணிநேரம் தொடர்ந்து நடத்துகிறேன்,” என்றார். சற்றே அதிர்ந்த படேல் சமாளித்துக்கொண்டு “கான்பூரா, ஏன் வாரணாசி தேவையில்லையா? பிரதமர் மோடிக்கெதிராக 2019இல் வாரணாசியில் நீங்கள்தான் போட்டியிடுவீர்களென இப்போதே நான் அறிவிக்கிறேன்,” எனக் கூற, சுக்லா உட்பட அனைவருக்கும் பெருஞ்சிரிப்பு வந்தது.
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றி ஆட்சியை பிடித்த நான்கு நாட்கள் வரை காங்கிரஸ் தொலைக்காட்சியில் அதிகமாகவே தென்பட்டதால் காங்கிரஸின் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கான கட்சியின் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்க ராகுல் தெற்கிலிருந்து தேடினார். கேரளாவின் ஏ.கே. அந்தோணி மற்றும் கே.சி. வேணுகோபால், கர்நாடகாவின் மல்லிகார்ஜுன் கார்கே போன்ற ஷெர்பாக்களை அவர் தேர்வு செய்தபோது அவ்வளவாக இந்தி பேசத் தெரியாத முதலிரண்டு தலைவர்கள் கூட்டத்தில் பேசப்படுவதை எப்படிப் புரிந்துகொள்வார்களோ என்று பலரும் நினைத்தனர்.
ஆயினும், தொலைக்காட்சியில் காட்டப்பட்ட குழப்பத்தையும் மீறி, கட்சியின் இயல்பான தரத்துடன் ஒப்பிட்டால் இரு தலைவர்களும் தத்தம் வேலையை சீக்கிரமாகவே செய்து முடித்துவிட்டனர். முன்பெல்லாம் சட்டமன்ற கூட்டம் கூட்ட காங்கிரஸ் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் கோவாவில் பெற்ற அனுபவத்திற்குப் பின்னர் (கிடைத்த நேரத்தை பாஜக சாதகமாக்கிக் கொண்டது) ‘முதலில் இந்த வேலைதான்’ என்ற தத்துவத்தை காங்கிரஸ் பின்பற்ற ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
இயல்பை மீறி அவ்வப்போது ஜாலியாக இருப்பதில் தவறில்லை; சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில்களில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் காங்கிரசார் அப்படி இருப்பதில் குற்றமில்லை. இவ்விஷயத்தில் லுட்யெனால் நிர்மாணிக்கப்பட்ட தில்லியில் சுவாரசியமான ஒரு பாணி தெரிகிறது: அரசியல்வாதிகள் தமது நண்பர்களின் இல்லங்களில் அரசியல் நிகழ்வுகளை நடத்துவது. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீதும் அவரது மனைவி லூயிசும் நடத்தும் கிறிஸ்துமஸ் விருந்து 12, தீன்மூர்த்தி லேனில் (குமாரி செல்ஜாவின் வீடு) நடைபெறுகிறது. முன்பு இவ்வீட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத்தும் மூத்த காங்கிரஸ் தலைவர் தரம்வீர் சின்ஹாவும் வசித்துள்ளனர்.
முன்னாள் பாஜக எம்.பி.யும் ஜனசங் தலைவருமான ஜே.கே. ஜெயின் தனது 50ஆவது திருமண ஆண்டு விழாவை தொழிலதிபர் சஞ்சய் டால்மியாவின் இல்லத்தில் கொண்டாடினார். பல தில்லி அரசியல்வாதிகள் தமது இல்லத்தில் பிறர் வீட்டுத் திருமணங்களை இலவசமாக நடத்தியும் வருகின்றனர்.
ரஃபேல் போர் விமான பேர வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணையைத் தனக்குக் கிடைத்த வெற்றியாக பாஜக மார்தட்டிக்கொள்கிறது.
ஆயினும். சமீபத்தில் நடந்து முடிந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமணத்தில் இச்சர்ச்சை அக்கட்சியினரிடம் அதிகமாகத் தென்பட்டது போல் தெரிகிறது. திருமணத்திற்குச் சென்றிருந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல், பாஜகவினர் எண்ணிக்கை குறைவாகவும், மத்தியில் முன்னாளில் ஆண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. பிரதமர் திருமணத்திற்கு வராதது அதிகமாகப் பேசப்பட்டது. தேசத்தின் முக்கியமான நபர்கள் அனைவரும் சென்றிருந்த ஒரு திருமணத்திற்கு வருமாறு நாட்டிலேயே மிக வலிமையானவரை நாட்டிலேயே அதிபணக்காரர் எப்படி அழைக்காமல் இருந்திருப்பார்?
நன்றி: தி டெலிகிராஃப்
https://www.telegraphindia.com/opinion/election-results-have-left-amit-shah-even-more-shocked-than-narendra-modi/cid/1678945?ref=also-read_story-page

கருத்துகள் இல்லை: