ஞாயிறு, 16 டிசம்பர், 2018

குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை

சிபிஐ அலுவலகத்தில் குட்கா விஜயபாஸ்கர்.
tamil.news18.com "குட்கா விற்பனை முறைகேடு வழக்கில் சிபிஐ அலுவலகத்தில்
ஆஜரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடமும் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யின் 2-வது கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று இறுதிக்கெடு விதிக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாடகை காரில் ரகசியமாக சென்று ஆஜரானார். அவரைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆஜராகினர்.


விஜயபாஸ்கரையும், சரவணனையும் ஒரே அறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன்வைத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில், குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெறப்பட்டதாக உதவியாளர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், தாம் லஞ்சம் பெறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டில் குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்த பிறகும் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றாரா? என்பதை அறிந்துகொள்வதற்காகவே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: