புதன், 19 டிசம்பர், 2018

கலப்பட வெல்லம் உற்பத்தி; கரும்பு விவசாயிகள் .. திடீர் முற்றுகை!

 Mixed Jaggery production; Sugarcane Farmers Collector's Office Sudden Siege!நக்கீரன் : சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, சின்னத்திருப்பதி, இடைப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. வெல்லம் உற்பத்தியாளர்கள் பலர், சர்க்கரை மற்றும் ரசாயன பொருள்களைக் கலந்து தரமற்ற வெல்லத்தை உற்பத்தி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
 கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்பு, மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கலப்பட வெல்லம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் நேற்று நடந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறினர். கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதால், கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் போவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
;
இது தொடர்பாக கரும்பு விவசாயிகள் பலமுறை உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கலப்பட வெல்லம் தயாரிப்பு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில்தான், கலப்பட வெல்லம் தயாரிப்பை முற்றிலும் கட்டுப்படுத்தக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமையன்று (18.12.2018) திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கோரிக்கை மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் சிலரை மட்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர்.


இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ''கலப்பட வெல்லம் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். அவர்களும் சோதனை நடத்தி கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்கின்றனர். சில நாள்களில் அந்த வெல்லம் விடுவிக்கப்படுவதால், அவையும் சந்தையில் விற்பனைக்கு வந்து விடுகின்றன.

கருப்புச்சாறுக்கு பதிலாக சர்க்கரை, ரசாயனங்களை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கப்படுவதால் கரும்பு கொள்முதல் கணிசமாக குறைந்து விடுகிறது. கரும்பு டன்னுக்கு 3500 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 1400 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது.
;
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது பிரச்னை மட்டுமின்றி, கலப்பட வெல்லத்தை உண்பதால் முதியோர், குழந்தைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. கலப்பட வெல்லம் தயாரிப்பை, அரசே மறைமுகமாக ஊக்குவிக்கிறது. எங்கள் கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை: