செவ்வாய், 18 டிசம்பர், 2018

மோடியின் சோனியா ராகுல் வெறுப்பு பிரசாரத்தால் அதிக பயன்பெற்ற காங்கிரஸ் ..

சவுக்கு :சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் (சோனியா) காந்தி குடும்பத்தைத் தாக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. பிரதமரது தேர்தல் பிரசாரங்களில் உரத்த குரலில் காந்தி குடும்பத்தைத் தாக்குவது என்பது பிரிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. குஜராத் முதல்வராகத் தான் இருந்தபோது சோனியா காந்தியை ‘ஜெர்ஸி பசு’ என்றும் ‘பாஸ்தாபென்’ என்றும் அழைத்த மோடி தற்போது ராகுல் காந்தியை ‘நாம்தார்’ (வம்சாவளி அரசர்) என்றும் தன்னை ‘காம்தார்’ (வேலை புரிபவர்) என்று
குறிப்பிடுகிறார். இவரது சொல்லம்புகளால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படவில்லை. என்றாலும், காந்தி குடும்பத்தினரைப் பொதுமேடையில் அவமானப்படுத்துதல், திட்டுதல் என்பதே ஆளுங்கட்சியின் பாணியைக் காட்டும் கண்ணாடியாகிவிட்டது. ஆனால், காந்தி குடும்பத்தினரைத் தாக்குவது பலருக்குச் சலிப்பூட்டுவதாகவும் ராகுலுக்குச் சாதகமாகவும் தற்போது ஆகிவிட்டதோ?
அதிகபட்ச வெறுப்பு உமிழப்படும் ராகுல் காந்தியின் நிலை, தார்மிக அடிப்படையில் உயர்ந்துள்ளது என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. அவர் மக்களின் அனுதாபத்தைப் பெற்று ‘பாவம் அவர்’ என்று அவர்கள் சொல்லும் நிலைக்குச் சென்றுவிட்டார். ஜெய்ப்பூர் பிரசாரத்தின்போது சோனியா காந்தியை மறைமுகமாகத் தாக்கும் விதமாக ‘காங்கிரஸின் விதவை யார்’ என அவர் பேசியதால் சோனியா காந்திக்கு ஆதரவாகச் சமூக ஊடகங்களில் பெரும் அனுதாப அலை வீசியது.
குடும்பத்தின் மீது வீசப்படும் ஏவுகணைகளைத் தனக்குச் சாதகமாக்கி அதன் மூலம் அரசியல் செய்வதில் நிபுணராகிவிட்டதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். காங்கிரஸின் வெற்றிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய ராகுல், பிரதமர் மோடியைப் போல் ஆணவத்துடன் இருக்கக் கூடாது எனத் தான் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். ராகுல் மீது ஏவப்பட்ட வசைமொழி அவரை ஒரு பாதுகாப்பற்ற, காயப்பட்ட வீரனாகக் காட்டியது; ராகுலும் பதிலுக்கு வசைமொழி பாடவில்லை. விவசாயிகள், வேலையில்லாமல் திண்டாடுபவர்கள், பொருளாதாரச் சீரழிவால் அவதிப்படும் மக்களைப் பற்றியே பேசினார்.
காங்கிரசின் வம்சாவளி அரசியலை பாஜக கடுமையாக விமர்சனம் செய்த விதம் பலரைக் கவர்ந்தது. அரசியல் கட்சி ஒன்று உச்சபட்சப் பதவியை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டும் ஒதுக்கும்போது அனைவருக்கும் சம உரிமை என்கிற ஜனநாயக நிபந்தனை இதில் அடிபட்டுப்போகிறது. ஆனால், காங்கிரஸ் பதவியில் இருக்கும்போது காந்தி குடும்பத்தாரை தாக்குவதும் அக்கட்சி பதவியில் இல்லாதபோது தாக்குவதும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. சோனியா காந்தி பலவீனமான, அவ்வளவாக வெளியே வராத ஒரு நபர்.
ஆட்சியில் இருக்கும் பாஜக தான் பதவியில் இருப்பதை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் பேசும் மொழியிலேயே இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது. வலுமிக்க பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் எதிர்க்கட்சியின் ஒரு குடும்பத்தாரைத் தாக்கும்போது, அது ஆட்சிக்க்கு எதிராகச் சமத்துவத்துக்காகக் கொடுக்கப்படும் குரலாகத் தெரியவில்லை; ஏற்கனவே தேர்தலில் தோற்ற ஒரு கட்சியை மீண்டும் தாக்கத் துடிக்கும் திட்டமாகத்தான் தெரிகிறது.
2013-14இல் ‘மரண வியாபாரி’ என்று காங்கிரஸ் மோடிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது கடுமையான தாக்குதலால் பாதிக்கப்பட்டவராக மோடியைப் பலர் நினைத்தனர். பலருக்கு அவர் பணக்காரர்களுக்கெதிரான நாயகராகவும், தில்லி வரை வந்து ஆளும் பணக்காரர்களை ‘அசைத்துப்பார்க்க’ வந்த ‘வெளி நபராகவும்’ தெரிந்தார். ஆனால் ஒரே தோட்டாவை இரண்டு முறை சுட முடியாது; ஐந்தாண்டுகளுக்கு முன் கடைப்பிடித்த வம்சாவளி ஆட்சிக்கெதிரான உத்தி இப்போது கைகொடுக்காது.
ராஜஸ்தானில் மோடி ‘ரோஜாப்பூ அணிந்தவர்’ விவசாயிகளைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை எனத் தாக்கினார். சிகாரில் பேசும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்றா வசனத்தைத் தான் உச்சரிக்கக் கூடாது என தனக்கேதிராக ‘ஃபத்வா’ (கட்டளை) ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால், கடன் சிக்கலில் உழலும் இன்றைய விவசாயி, நேரு – காந்தி குடும்பத்தில் ஒருவர் ரோஜாப்பூ அணிகிறாரா இல்லை, பாரத் மாதா கீ ஜே தொடர்பான கட்டளை வந்ததா எனக் கவலைப்படும் நிலையிலா இருக்கிறார்?
‘காவலாளி திருடனாகிவிட்டார்’ என்னும் ராகுலின் வாசகம் தனிப்பட்ட முரையில் அவமானப்படுத்துவதுதான். இருந்தாலும், சூடான அரசியல் களத்தில் இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் பற்றியும் விமான ஒப்பந்தங்கள் பற்றியும் அவரால் குறிப்பிட முடிகிறது.
ஆனால், கிறிஸ்டியன் மிச்செலை மோடி ’ரகசியக் கூட்டாளி’ என்றும் ராகுலின் நண்பர்களுக்கு ‘உதவுபவர்’ என்றும் சொன்னதும் தனிப்பட்ட வெறுப்பை உமிழும்படிதான் இருக்கிறது.  இத்தேர்தல் பிரச்சாரக் களத்தைப் பார்த்தால் மோடி இன்னும் 2013-14இல் தனக்குதவிய, காந்தி குடும்பத்திற்கெதிராக வெறுப்பை உமிழ்வது என்னும் வெற்றி சூத்திரத்தையே நம்பிக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.
1990களின் இறுதியிலும் சோனியா பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் ‘அந்நியப் பிறப்புக்காக’ விமர்சிக்கப்பட்டார் என்பதையும் அதன் பின் இரு தேர்தல்களை அவர் வென்றார் என்பதையும் அவர்கள் மறக்கக் கூடாது. இன்று தன் மீது தொடுக்கப்படும் தீவிரமான தாக்குதலையும் மீறி ராகுல் தன் கட்சியை மூன்று மாநிலங்களில் வெற்றிபெற வத்திருக்கிரார். அன்றாட வாழ்க்கை கடினமாகிவிட்டதையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் வாக்காளர் கோபம் காட்டிவிட்டது. இப்போதும் காந்தி குடும்பத்தார் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அவர்களது புகழ் கூடி, கடந்த தேர்தலில் ‘பாதிக்கப்பட்டவர்’ முத்திரையுடன் மோடி வெற்றி பெற்றது போல் 2019 தேர்தலில் ராகுல் வெற்றி பெறக்கூடும். எதிர்க்கட்சியினர் என்ற முறையில் காந்தி குடும்பத்தைத் தாக்குவது தைரியமானதாகத் தெரியலாம், ஆனால் பிரதமரான பின்பும் மோடி அதையே தொடருவது அவருக்கென்று சொல்லிக்கொள்ளக் கொள்கை அளவில் வேறு எதுவுமற்ற வறட்சியைத்தான் காட்டுகிறது.
சகாரிக்கா கோஷ்
நன்றி
https://timesofindia.indiatimes.com/blogs/bloody-mary/gandhi-bashing-is-a-tired-old-formula-thats-not-paying-off/

கருத்துகள் இல்லை: