வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை!

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை!minnambalam : ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்குக் காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. அதனால், ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனவும், அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனை செய்யக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகளை இன்று (டிசம்பர் 20) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரணை செய்தது.
அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தவே மத்திய அரசு விதிகளை வகுக்க உள்ளதாகவும், தனி நீதிபதியின் உத்தரவால் ஆன்லைன் மருந்து நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், இணைய தளங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தக் கொண்டு வரப்படும் வரைவு விதிகளை மீறும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரைவு விதிகள் ஜனவரி இறுதிக்குள் வகுக்கப்படும் எனவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்தஉத்தரவுக்குத் தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையடுத்து, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இன்றுடன் முடிவடைவதால், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்தஉத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதை ஏற்று, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தங்களது விற்பனையைத் தொடரலாம் என்பது தெளிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: