புதன், 19 டிசம்பர், 2018

ப சிதம்பரம் : தேர்தல் யுத்தத்துக்கு ஆயத்தமாக இன்னும் 100 நாட்கள் உள்ளன.

Savukku  வறுமை, வளர்ச்சி பற்றி ஏமாற்றப்பட்ட வாக்குறுதிகளுடன் மக்களால் வாழ முடியும்; ஆனால் எப்போதும் போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் வாழ முடியாது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது எப்போதும் ஒரு மாயைதான். நாட்டில் தேர்தல் வரைபடத்திலிருந்து காங்கிரஸை ஒழித்துக்கட்ட முடியும், அவ்வாறு செய்வோமென்ற முட்டாள்தனமான கருத்தைச் சொல்லி மக்களை அதை நம்பவைக்க பாஜகவும் குறிப்பாக தலைவர்கள் திரு. நரேந்திர மோடியும் திரு. அமித் ஷாவும் மிகவும் சிரமப்பட்டனர். காங்கிரஸ் இதை நிராகரித்தது. இந்த பைத்தியக்காரத்தனமான வாசகத்திலிருந்து தன்னை ஆர்எஸ்எஸ்ஸேகூட அந்நியப்படுத்திக் கொண்டது. இந்திய மக்களோ பாஜகவின் திட்டத்தைக் குற்றமாக எடுத்துக்கொண்டுவிட்டனர்.
பாஜகவும் காங்கிரசும் நேரடியாகப் போட்டியிட்ட மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் சந்தர்ப்பம் கிட்டியபோது வாக்காளர்கள் உறுதியாக காங்கிரசுக்கே வாக்களித்தனர். ‘உறுதியாக’ என்ற வார்த்தை இதை படிக்கும் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் தேர்தல் முடிவுகளை கவனமாக அலசி ஆராய்ந்த பின்னரே இவ்வார்த்தையைத் தேர்ந்தெடுத்தேன்.

உறுதியான தீர்ப்பு
பின்வரும் நிஜங்களைக் கொஞ்சம் பாருங்கள்:
சத்தீஸ்கரில் மாநிலம் உருவானது முதல் இதுவரை எக்கட்சியுமே பெறாத அளவுக்கு அதிக இடங்களீல் (68/90) காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, பதிவான வாக்குகளில் 43% காங்கிரசுக்குக் கிடைத்துள்ளன.
ராஜஸ்தானில் பதிவான வாக்குகளிலும் (13,935,201 : 13,757,502) வாக்குகளின் சதவீதத்திலும் (39.3% : 38.8%) காங்கிரஸ் பாஜகவை முந்தியுள்ளது. மேலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட கட்சிகளுக்குk கிடைத்த 184,874 வாக்குகளும் காங்கிரசின் வாக்குகளுடன் சேர்க்கப்பட வேண்டும்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை விட ஒரு தொகுதி குறைவான எண்ணிக்கை எனப் போட்டியிட்ட காங்கிரஸ் பாஜகவை விட அதிகத் தொகுதிகளில் (114:109) வெற்றி பெறது; காங்கிரசும் பாஜகவும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றன (15,595,153 vs 15,642,980).
தேர்தலுக்கு முன் இம்மாநிலங்களில் காங்கிரசின் நிலையைப் பார்த்தால், காங்கிரஸ் பாஜகவுக்கு சமமாக வாக்கு வாங்கியதே இம்முடிவுகள் எத்தனை உறுதியானது என்பதை புரியவைக்கும். காங்கிரசுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி கூட்டணி வைத்திருந்தால் முடிவுகள் இன்னும் உறுதியாகக்கூட இருந்திருக்கும். பகுஜன் கட்சி ராஜஸ்தானில் 6 இடங்களிலும் (4.0% – 1,410,995 வாக்குகள்), மத்தியப் பிரதேசத்தில் 2 இடங்களிலும் (5% – 1,911,642 வாக்குகள்) வென்றிருந்தது; காங்கிரசுக்கும் பகுஜன் கட்சிக்கும் தேர்தல் கூட்டணி அமைந்திருந்தால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தற்போது பெற்ற 114 இடங்களுடன் 29 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கும்.
முடிவுகளுக்கான காரணங்கள்
தொகுதிகளின் எண்ணிக்கையை விட்டுவிடுவோம். காங்கிரசுக்கு ஆதரவாக இத்தனை உறுதியாக மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். இந்தி பேசும் மாநிலங்களில் விவசாயிகளின் கஷ்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாக இருந்தன. பிற இடங்களில் இக்காரணங்கள் மிக நன்றாகவே பொருந்தின. அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ஆளுபவர்களுக்கு எதிராக வீசப்போகும் எதிர்மறையான பேரலையை பாஜக அரசு தாக்குப்பிடிக்குமா என்பதே இப்போதைய மிக முக்கியமான கேள்வி.
ஆழமாகப் பார்த்தால், இன்னும் பல காரணிகள் இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. தன் அன்றாட உணவு, வேலை வாய்ப்புகள் பற்றி மட்டுமே ஒரு சராசரி குடியுரிமையாளர் யோசிப்பான் என்று நினைக்கும் தவறை நாம் புரியக் கூடாது; கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் பற்றியும் அவர் நிச்சயம் யோசிப்பார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத்தின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். சலிப்பின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆதித்யநாத் மோடியை விட அதிக எண்ணிக்கையிலான தேர்தல் கூட்டங்களில் பேசினார். அம்மாதிரி ஒருவர் பசு பாதுகாப்பு, ராமர் கோயில் கட்டுவது, உலகிலேயே உயரமான ராமர் சிலை உருவாக்குவது, மாநிலங்கள் / நகரங்களுக்கு மறுபெயரிடுவது, மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம்களை விரட்டுவது பற்றி மட்டுமே பேசும்போது அவர் நம்பிக்கை / வளர்ச்சி / பாதுகாப்பு தரும் செய்தியை மக்களுக்குத் தருவதில்லை. மாறாக, எப்போதும் போராட்டம், வன்முறை, கலவரம், சமூகப் பிளவுபடும் நிலை போன்றதொரு நிலவரத்தை உருவாக்கி சராசரிக் குடிகக்கள் மனத்தில் பயத்தையே அவர் விதைக்கிறார். என் கணிப்பில் அத்தகைய பயமானது மக்கள் (ஏழைகளின்) வாக்களிக்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்; வறுமை, வளர்ச்சி பற்றி ஏமாற்றப்பட்ட வாக்குறுதிகளுடன் அவர்களால் வாழ முடியும்; ஆனால் எப்போதும் போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் வாழ முடியாது.
பயத்தை நாம் நீக்க வேண்டும்
 மீதமிருக்கும் மக்களின் மீதும் ஆதித்யநாத் இத்தகைய பாதிப்பையே ஏற்படுத்தியிருந்தார். மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தலின் கடைசிக் கட்டப் பிரசாரத்தின்போது பேசிய பேச்சுக்கள் நிஜமாகவே ஒரு அதிபயங்கரமான நிலையை உருவாக்கக்கூடியவை. மூத்த குடிமக்கள் அல்லது இல்லத்தரகள் அல்லது தொழில்புரிவோர் அல்லது இளம் மாணவர்கல் வாக்களிக்கும்போது இத்தகைய பயத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என நீங்கள் நினைத்தால், அது பெரும் தவறு. கடந்த வாரம் பொதுவாக வெளியே வராத பல தொழிலதிபர்களும் வங்கி அதிகாரிகளும் நட்புறவுடன் என்னுடன் கை குலுக்கி, காங்கிரஸ் கட்சிக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்! டிராலியைத் தள்ளிக்கொண்டு சென்ற ஒரு படித்த இளம்பெண் என்னிடம் வந்து தேர்தல் முடிவுகளால் அவள் அடைந்த மகிழ்ச்சி பற்றிக் கூறி, எங்கள் கட்சிக்கு வாழ்த்துக்களையும் சொன்னார். மதிய உணவின்போது மூத்த குடிமக்கள் பலர் என்னிடம் வந்து தேர்தல் முடிவுகளால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் 2019இல் நிலைமை மாறுமென்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அரசியல் சூழலைப் பார்த்து எப்போதும் ஏடாகூடமாகவே எழுதும் பத்திரிகையாளர்களும்கூட என்னிடம் நேர்காணல் காண விருப்பத் தெரிவித்துள்ளனர் (இதனால் அவர்களது தலைவர்கள் என்ன நினைப்பார்களோ எனக்குத் தெரியவில்லை!).
பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டு – சட்டங்கள், அவசர சட்டங்கள், வாக்குறுதிகள், தேடல்கள் (ரெய்டு), தண்டனை தருதல், திட்ட நிதிகள் – எல்லாவற்றின் உதவியுடனும் நிச்சயம் போருக்குத் திரும்பும். ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ள பின்னணியில் ‘உபரிப் பண’த்தைக் கைப்பற்ற அரசு பல இடங்களில் ரெய்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.
பாஜக திரும்பவும் யுத்தத்துக்கு ஆயத்தமாக இன்னும் 100 நாட்கள் உள்ளன. யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த எதிர்க்கட்சிகளுக்கும் இன்னும் 100 நாட்களே உள்ளன. 2019இல் மக்கள் தரப்போகும் தீர்ப்பானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மதிப்புக்களையும் நிர்ணயிக்கப் போகின்ற ஒரு மாபெரும் தீர்ப்பாக நிச்சயம் இருக்கும்.
ப. சிதம்பரம்
( சிதம்பரம் முன்னாள் மத்திய நிதியமைச்சர்)
 நன்றி: தி நியூ எக்ஸ்பிரஸ் (https://indianexpress.com/article/opinion/a-hundred-day-journey-state-assembly-election-results-2018-congress-bjp-madhya-pradesh-chhattisgarh-rajasthan-5495524/)

கருத்துகள் இல்லை: