சனி, 28 ஏப்ரல், 2018

கலைஞரை சந்திக்கிறார் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ... மூன்றாவது அணி பேச்சு வார்த்தை

tamil.oneindia.com/-Mathi : சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை
தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் நாளை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் 3-வது அணி குறித்தும் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார் சந்திரசேகர ராவ். இதையடுத்து மமதா பானர்ஜி டெல்லி சென்று பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். திமுக எம்பி கனிமொழியுடனும் மமதா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் மு.க. ஸ்டாலினுடன் 3-வது அணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
மமதாவின் 3-வது அணி முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் சந்திரசேகர ராவின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,

கருத்துகள் இல்லை: