வெள்ளி, 27 ஏப்ரல், 2018

2 வழக்குகளிலும் அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

தி.மு.க தொடர்ந்த இரு வழக்குகளிலும் சாதமாக தீர்ப்பு - ஆளுங்கட்சியினர் டபுள் ஹேப்பிமாலைமலர் :சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும், 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த இரு வழக்குகளையும் விசாரித்து வந்த தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இரு வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ‘மக்கள் என்ற பேராயுதம் இருக்கும் வரை திமுகவின் அத்தனை ஆயுதங்களும் எங்களை நோக்கி வராது. அதிமுக அரசு மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக வழக்கு தொடர்ந்தது’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குட்கா வழக்கில் நேற்று சி.பி.ஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதால் கொஞ்சம் வருத்ததில் இருந்த ஆளுங்கட்சி தரப்பிற்கு இன்றைய தீர்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: