வெள்ளி, 27 ஏப்ரல், 2018

11 எம்எல்ஏக்கள் வழக்கு தள்ளுபடி .. தகுதி நீக்கமறுப்பு .. உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்’- ஸ்டாலின்

tamilthehindu :11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மற்றும் ஜெயலலிதா படத்திறப்பு வழக்கு ஆகியவற்றில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன்மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் (ஓபிஎஸ் அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், “எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது”, எனத் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏ-1 ஜெயலலிதா அம்மையாரின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினை தள்ளி வைத்திருக்கவேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும்.
அந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்.”என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: