புதன், 25 ஏப்ரல், 2018

நடிகர் விஜயகாந்தின் பேட்டி அவர் வாயால் கூறப்பட்டதா ? அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்புணர்ச்சியின் வெறி வெளிப்பட்டதா?

நினைவில்லையா?: விஜயகாந்துக்கு திமுக பதில்!மின்னம்பலம்: ஸ்டாலின் குறித்து விஜயகாந்த் கூறிய கருத்துக்கு திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநில செயலாளரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் தனது அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.
தேமுதிக நிறுவனரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு நேற்று (ஏப்ரல் 24) அளித்த பேட்டியில். திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவிடாமல் ஸ்டாலின் தன்னைத் தடுத்ததாகவும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு பிரகாசமாக இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அவர் தவறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
இதற்குத் தனது அறிக்கையின் வாயிலாக நடிகரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் இன்று (ஏப்ரல் 25) பதில் அளித்துள்ளார். “நடிகர் விஜயகாந்த், இந்தப் பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா ? அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா? விஜயகாந்த் அவர்களே, உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி தளபதி மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய்க் கக்கியது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், "கலைஞரைப் பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என நா கூசாமல் பேசி உள்ளீர்களே!
தலைவர் கலைஞரைச் சந்திக்க எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனே தலைவரிடம் சென்று ‘விஜி வந்திருக்கிறார்’ என்று எத்தனையோ தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் போன்றோரைத் தாண்டி உங்களைத் தலைவர் கலைஞரிடம் பேச வைத்து, வாசல் வரை வந்து, உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
“‘என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை’ என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள் விஜயகாந்த்” என்று கூறியுள்ள அவர், “மு.க.ஸ்டாலின் எப்போதும் உங்களை விரும்பியதும் இல்லை, வெறுத்ததும் இல்லை. அவரின் பொது வாழ்வின் அரசியல் பயணத்தில் புலிகளையும் புல்லுருவிகளையும் கடந்து செல்கிறார். அரவுகளையும் கயிற்றரவுகளையும் கடந்து செல்லும் மக்கள் தொண்டர் எங்கள் ஸ்டாலின்.
காவிரி பிரச்சினை தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு விஜயகாந்த் ‘ஸ்டாலினை துதி பாடுவதைத் தவிர வேறு எதுவும் அங்கே நடக்கப்போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா? ஸ்டாலின் வேண்டுமானால் தன்னைக் கருணாநிதி என்று நினைத்துக்கொள்ளலாம் ஆனால் அது உண்மை அல்ல’ என்று உளறிக்கொட்டியுள்ளார். ஆனால் எங்கள் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நீங்கள் ஆரம்ப காலங்களில் மேடையில் பேசும்போது கலைஞரின் வைர வரிகளான ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ எனப் பேசிக் கைதட்டல் பெறுவீர்கள். கலைஞருக்கே பிடித்த வரிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் ‘மனசாட்சி தூங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும்’. விஜயகாந்த், உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தைப் பார்க்கிறோம்.
அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தி இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைக்காதீர்கள். சினிமா வேறு, அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு” என்று கண்டித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: