வியாழன், 26 ஏப்ரல், 2018

நிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்? ... கவர்னரைப் பற்றி ஏதோ சொல்ல நிர்மலாதேவி.....

நிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்?
செ.சல்மான் BALAKRISHNAN R ஆர்.எம்.முத்துராஜ் வி.சதிஷ்குமார்
ஜூனியர் விகடன்
“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான், அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான தகுதியைப் பெறமுடியும். இந்தப் பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு, சாதாரண அறைகளைத்தான் விடுதியில் ஒதுக்குவார்கள். நிர்மலாதேவிக்கு ஸ்பெஷலாக ஏ.சி அறை ஒதுக்கியுள்ளார்கள். ஒருமுறை இவர் விடுதியில் தங்கியிருந்தபோது, இரவில் காரில் வந்த ஒருவர் இவரை ஏற்றிச்சென்று அதிகாலையில் திரும்பக் கூட்டிவந்து விட்டுள்ளார். அது யாருடைய கார், கூட்டிச் சென்றது யார் என்பதெல்லாம் மர்மமாக உள்ளது. பல ஆண்டுகளாகவே நிர்மலாதேவி மாதிரியானவர்களின் நடமாட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்துவருகிறது. இங்குள்ள விருந்தினர் மாளிகையில், பல நாள்கள் இரவு முழுவதும் கொண்டாட்டம் நடக்கும். உயர்கல்வித் துறை அதிகாரிகளும், ஆளும்கட்சிப் பிரமுகர்களும்கூட இங்கு வந்து செல்வார்கள்’’ என்று குமுறுகிறார்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள்.
“இருட்டிய பின்புதான் கைதாவேன்!”

‘பூட்டை உடைத்து நிர்மலாதேவியை கைதுசெய்யப் போகிறோம்... கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்’ என்று வீட்டு வாசலில் இருந்த செய்தியாளர்களைப் போகச் சொல்லிவிட்டு, மிகவும் பாதுகாப்பாக அவரை ஏப்ரல் 16-ம் தேதி மாலை 7 மணிக்கு அருப்புக்கோட்டை போலீஸ் கைதுசெய்து அழைத்துச் சென்றது. அப்போதே தெரிந்துவிட்டது, மேலிட உத்தரவுகளைக் கேட்டுத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பது. ‘இருட்டிய பின்புதான் கைதாவேன்’ என்று நிர்மலாதேவி சொன்னதால், அவர் விருப்பப்படியே அழைத்துச் சென்றனர். மதுரை ரோடு, திருச்சுழி ரோடு எனச் சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்துத்தான் காவல் நிலையத்துக்குக் கூட்டி வந்தார்கள். ஏப்ரல் 17-ம் தேதி மதியத்துடன் விசாரணை முடிந்து விட்டது. ஆனாலும், மாலை 6 மணிக்கு சென்னையில் கவர்னர் பிரஸ்மீட் ஆரம்பித்த பிறகுதான், விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை அழைத்துச் சென்றனர். அதுவரை, மகளிர் காவல் நிலையத்தின் கதவைப் பூட்டி வைத்துக்கொண்டு, ‘விசாரணை நடக்கிறது’ என்றே சொல்லிக்கொண்டிருந்தனர்.
மூன்று செல்போன்கள், ஐந்து சிம் கார்டுகள்!
நிர்மலாதேவியிடமிருந்து மூன்று செல்போன்களைக் காவல்துறை கைப்பற்றியது. அவற்றிலிருந்த ஐந்து சிம் கார்டுகளும் கவனமாக எடுக்கப்பட்டன. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்களில் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், கல்வித்துறை முக்கியப் புள்ளிகள் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், மாணவிகள் பலரின் புகைப்படங்களும் இருந்துள்ளன.
‘‘வாங்க மேடம்... போங்க மேடம்... சாப்பிடுங்க மேடம்...’’ என ஏட்டு முதல் ஏ.டி.எஸ்.பி வரை நிர்மலாதேவியை மிகவும் மரியாதையாகவே நடத்தினர். பல்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் அலுவலக ஆட்கள் ஆகியோருடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதைப் பற்றி விசாரணையின்போது தயக்கமின்றி அவர் கூறியிருக்கிறார். கணவருடன் சென்னையில் வசித்துவந்த இவர், கணவர் வெளிநாடு சென்றதும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கல்லூரி, பல்கலைக்கழக வட்டாரங்களில் பல நண்பர்களுடன் பழகியிருக்கிறார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரும் பிள்ளைகளும் இவரைவிட்டுப் பிரிந்துசென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தில் நடைபெறவேண்டிய அலுவலகப் பணிகளுக்கு இவரையே தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது. கல்லூரிக்கு ஆய்வுக்கு வருகிற உயர்கல்வித்துறை அதிகாரிகளை வரவேற்று கவனிக்கும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்படுமாம். அதன் நீட்சிதான், கவர்னர் அலுவலக ஆட்களுடன் தொடர்பு வரை சென்றுள்ளது.
விவகாரமான இந்த ஆடியோவை வைத்துக்கொண்டு, கோடிக்கணக்கில் அவரிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர். ‘பணம் தர முடியாது’ என இவர் மறுத்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தையும் விசாரணையில் நிர்மலாதேவி கூறியிருக்கிறார்.
நீதிமன்றத்துக்குக் கூட்டிச்செல்வதற்கு முன்பாக, நிர்மலாதேவியின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைக் கழற்றிவிட்டு, மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு போலீஸார் கூறியுள்ளனர். அப்போது, அவர் அழுதுள்ளார். மீடியாக்கள் அவரைப் படம் எடுத்து விடாமல் போலீஸார் பாதுகாத்தனர். நிர்மலாதேவியை வாகனத்தில் வைத்து அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.
துணைவேந்தர் பதற்றம்!
நிர்மலாதேவி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதும், ஏப்ரல் 14-ம் தேதி டெல்லிக்குக் கிளம்பி சென்றுவிட்டார் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை. இவருக்குத் துணைவேந்தர் பதவியை வாங்கிக் கொடுத்தவர்களில் ஒருவர் டெல்லியில் இருக்கிறார். அவரைச் சந்திக்கவே இவர் அங்கு சென்றதாகச் சொல்லப்பட்டது. டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இவர் சந்தித்துள்ளார்.
நிர்மலாதேவி விவகாரத்தில் ஏப்ரல் 16-ம் தேதி அருப்புக்கோட்டையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், ஐந்து பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டதாக டெல்லியில் இருந்தபடி கூறினார் செல்லத்துரை. ஆனால், அந்த கமிட்டியை கவர்னர் கலைத்துவிட்டார். பதறியபடி சென்னை வந்த செல்லத்துரை, கவர்னர் மாளிகையிலேயே காத்துக் கிடந்தார். கவர்னரின் பிரஸ் மீட்டிலும் உடன் இருந்தார். இதற்கிடையே, காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையாவும், சில ஃபைல்களுடன் ராஜ்பவனுக்கு அழைக்கப் பட்டார்.
எஸ்கேப் ஆன நண்பர்கள்!
நிர்மலாதேவியுடன் பிஹெச்.டி ஆய்வு மேற்கொண்ட பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களான கருப்பசாமி, முருகன் ஆகியோர்தான் அவருக்கு நெருக்கமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இவர்கள் மூலம்தான் பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணி நிர்மலாதேவிக்குக் கிடைத்துள்ளது. அதன்பிறகு நிர்மலாதேவி நேரடியாகப் பெரிய இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார். நிர்மலாதேவியை ஒரு கருவியாகப் பயன்படுத்தியவர்கள் பெரிய புள்ளிகள். கருப்பசாமியும், முருகனும் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். நிர்மலாதேவி ஆடியோவில் குறிப்பிடும் பேராசிரியர் நாகராஜ் என்பவரும் விடுப்பில் சென்றுவிட்டதாக தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.
பல்கலைக்கழக விடுதியில்!
தொலைநிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணிக்கு பிப்ரவரி மாதம் வந்த நிர்மலாதேவி, மூன்று நாள்கள் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளார். அதற்குப் பின் மார்ச் 9-ம் தேதி புத்தாக்கப் பயிற்சிக்கு வந்தபோது, விடுதியில் தங்கியிருக்கிறார். அப்போதுதான், அவர்மீது மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதோடு அவரைப் பயிற்சியிலிருந்து விடுவிக்கும்படி தேவாங்கர் கல்லூரி, பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. மதுரையிலிருந்து மார்ச் 21-ம் தேதி கல்லூரிக்கு வந்த நிர்மலாதேவியை, கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. அதற்குப் பின்னும் அவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளார். பலரையும் அலுவல் நேரத்தில் சந்தித்துள்ளார். சஸ்பெண்டு செய்யப்பட்ட ஒருவர், பல்கலைக்கழக விடுதியில் எந்த அடிப்படையில் தங்கியிருந்தார் என்று தெரியவில்லை. இது பல்கலைக்கழகத்தின்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துச் சங்கங்களும் இணைந்து, கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள், ஏப்ரல் 17-ம் தேதி பல்கலைக்கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த புவனேஸ்வரன், சதாசிவம் ஆகியோரிடம் பேசினோம்.
‘‘கல்வித் தளத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தப் பல்கலைக்கழகம், கடந்த சில வருடங்களாக மிகவும் பாழ்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான மரியாதையைச் சிலர் கெடுத்துவிட்டனர். நிர்மலாதேவி போன்றவர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கும் கெட்ட பெயர். நிர்மலாதேவி யார் யாருடன் தொடர்பில் இருந்தார், அவரை இதுபோன்று இயங்க வைத்தவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். அவர் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்ததாகச் செய்திகள் வருகின்றன. சாதாரணமாக யாரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர முடியாது. செக்யூரிட்டி கண்காணிப்பு உண்டு. அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
கடந்த வருடம் ஒரு பேராசிரியர்மீது கொலை முயற்சி நடந்த பிறகு, உள்ளே வருகிற அனைத்து வாகனங்களின் விவரங்களும் பதிவு செய்யப் படுகின்றன. அந்தப் பதிவுகளை ஆய்வுசெய்ய வேண்டும். நிர்மலாதேவி இங்கு வந்த தேதிகளை வைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆராய வேண்டும். கல்லூரியில் தொடங்கி கவர்னர் வரை தெரியும் என்று சொல்கிற இவரிடம், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லை யென்றால், உயர் கல்வித்துறையில் நடைபெறுகிற பணி நியமனங்களுக்குப் பின்னால் மோசமான பின்னணிகள் இருக்கிறதோ என்று மக்கள் நினைக்கும் அபாயம் உள்ளது.
கவர்னர் பெயர் அடிபடும் ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க, கவர்னரே விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது வேடிக்கையானது. அப்படியே நியமித்தாலும், அந்தக் குழுவில் நேர்மையான கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த ஆசிரியரும், அலுவலரும் தப்பிக்கக் கூடாது’’ என்று எச்சரித்தனர்.
நிர்மலாதேவி கதறல்!
மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவியைச் சந்தித்துவிட்டு வந்த அவரின் வழக்கறிஞர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறினார். ‘அந்த ஆடியாவில் பேசியது நான்தான். அந்த ஆடியோ எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது’ என்றும் கூறினார். ‘அருப்புக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்துவோர் இடையே உள்ள போட்டியில், தேவாங்கர் கல்லூரிக்குக் கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் இப்படிச் செய்துவிட்டனர்’ என்றும் கூறினார்” என்றார்.
வந்தார் சந்தானம்!
சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு மாற்றப்பட்ட பின்பு, எஸ்.பி மகேஸ்வரி, டி.எஸ்.பி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான விசாரணைக் குழு விருதுநகர் வந்து, நிர்மலாதேவி வழக்கு விவரங்களைக் குற்றப்பிரிவிடமிருந்து பெற்றுக்கொண்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஏப்ரல் 19-ம் தேதி காலையிலிருந்து விசாரணையைத் தொடங்கி விட்டார்கள். அடுத்து, நிர்மலாதேவியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளார்கள். கவர்னரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் அதே ஏப்ரல் 19-ம் தேதி விசாரணையைத் தொடங்கினார். மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலாதேவியை அவரும் விசாரிக்கிறார்.
விடை தெரியாத பல மர்மங்களை விடுவிக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது.
- செ.சல்மான்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வீ.சதீஷ்குமார்
கவர்னர் ரகசியம்... பதறிய அதிகாரி
நிர்மலாதேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பல முக்கியத் தகவல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். ‘முருகன், கருப்பசாமி என இருவர் தனக்குப் பாலமாகச் செயல்பட்டனர்’ என்று குறிப்பிட்ட அவர், ஒருமுறை அலுவல் விஷயமாக கருப்பசாமியுடன் காரில் பயணித்தபோது நடந்த நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்திச் சொன்னாராம். இந்த ‘வேலை’க்குப் பலவிதமான டெஸ்ட்டுகளை வைத்துத்தான், தன்னைத் தேர்ந்தெடுத்தனர் என்றும் நிர்மலா கூறியிருக்கிறார்.
நிர்மலா வாக்குமூலம் அளிக்க, அதை வீடியோவில் பதிவுசெய்துள்ளனர். விசாரணையின் க்ளைமேக்ஸில், கவர்னரைப் பற்றி ஏதோ சொல்ல நிர்மலாதேவி வாயெடுத்துள்ளார். அதனால் பதற்றமடைந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணை அறையில் இருந்த மற்ற அதிகாரிகள், வீடியோ டீம் உள்பட அனைவரையும் உஷாராக வெளியே போகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவர் மட்டும் நிர்மலாதேவியிடம் விசாரணையைத் தொடர்ந்துள்ளார்.
விசாரணையின் முக்கியமான கட்டத்தில் தங்களை வெளியே போகச் சொன்னதால், மற்ற அதிகாரிகள் கடும் எரிச்சலில் உள்ளனர். ‘இருவரும் ஒரே இனம். அதனால், ஸ்பெஷலாக விசாரிக்கிறாரா? அல்லது, மேலிடத்திலிருந்து நிர்மலாதேவியைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறதா? அதனால்தான், நம்மை வெளியே போகச் சொன்னாரா?’ எனக் கடும் விமர்சனங்களை அவர்மீது மற்ற அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக விருதுநகர் மாவட்ட போலீஸார் மத்தியிலும் இந்த விஷயம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
- ஆர்.பி

கருத்துகள் இல்லை: