செவ்வாய், 24 ஏப்ரல், 2018

காவிரியை விட மெரினாதான் அரசுக்கு முக்கியமா? சென்னை உயர்நீதிமன்றம் சாட்டை ..

தினத்தந்தி :சென்னை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி
சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
90 நாட்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதற்கு ஐகோர்ட்டு, ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கூறிவிட்டது.
‘டெல்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் அரை நிர்வாணம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை நடத்தினர். அரை நிர்வாணமாக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அய்யாகண்ணு மற்றும் அவரது சங்க உறுப்பினர்களான விவசாயிகள் ஆகியோருக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று மனுதாரர் வக்கீலிடம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது. பின்னர் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரியிருந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டது. அதில் மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.


சென்னையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2013-க்கு பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என ஐகோர்ட்டு கூறிஉள்ளது. 

காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தது. கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூற முடியுமா? எனவும் கேள்வியை எழுப்பி உள்ளது ஐகோர்ட்டு

கருத்துகள் இல்லை: