வியாழன், 6 அக்டோபர், 2016

அப்போலோவின் கிரிமினல் வண்டவாளங்கள் ..

ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக வன்புணர்வு செய்யும் போது போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த அப்போலோ மருத்துவர்
Apollo
லகத்தரமான சிகிச்சை, மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அதிநுட்ப சிகிச்சைக் கருவிகள், அனைத்து நோய்களுக்குமான சிகிச்சை, பல்வேறு மொழி பேசத்தெரிந்த மொழிபெயர்ப்பு வசதிகள் இன்னும் எண்ணிமாளாத எண்ணற்ற வசதிகள் ….அப்படித்தானே……
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 21 வயதான இளம்பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (04.09.2016) அன்று நள்ளிரவு வேளையில் அங்கு இரவுப்பணி மருத்துவராக இருந்த டாக்டர்.ரமேஷ் செளஹான், அதே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலைபார்க்கும் சந்திரகாந்த் வங்கார் என்பவரின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருக்கிறார்.

ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர். திடீரென்று நள்ளிரவில் இழைக்கப்பட்ட இந்த அநீதியால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த இளம்பெண் இரண்டு நாட்கள் வரை தன்னுடைய குடும்பத்தாரிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கவேயில்லை; பிறகு தன்னை அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேற்றக்கோரி அழ ஆரம்பித்திருக்கிறார்; இவருடைய பெற்றோர் முதன்முதலில் ஐசியு-வில் தனியாக இருப்பதால்தான் ஒருவேளை கவலையுற்றிருப்பாரோ என்று ஆறுதல் கூறியிருக்கின்றனர். பிறகுதான் தங்கள் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கேள்விப்பட்ட அவர்கள் தாங்கமுடியாத அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் சவுகான் (இடது) மற்றும் சந்திரகாந்த் வாங்கர்
கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் சவுகான் (இடது) மற்றும் சந்திரகாந்த் வாங்கர்
சிறுநீரக திருட்டு புகழ் அப்பல்லோ மருத்துவமனையின் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை இதுதான். மருத்துவமனைக்குள் நீங்கள் ஒருமுறை நுழைந்து விட்டால் பிறகு உங்கள் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம் என்று அங்கலாய்க்கிறது அப்பல்லோ. 120 நாடுகளிலிருந்து எங்களிடம் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள் என்கிறது அப்பல்லோ குறித்த விளம்பரம் ஒன்று. மேலும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த மருத்துவர்களையே பணிக்கு அமர்த்தியுள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது அப்பல்லோ.
வன்புணர்ச்சி குற்றவாளியான டாக்டர்.ரமேஷ் செளஹான் அப்பல்லோவின் டெல்லி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு குஜராத் காந்திநகர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். இதே மருத்துவமனையில் மூன்று வருடமாக வேலை பார்த்தும் வந்துள்ளார் . இப்போது அவரும் அவருக்குத் துணையாக இருந்த துப்புரவுத் தொழிலாளியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்பல்லோ நிர்வகித்து வரும் எந்த ஒரு இணையத் தளத்திலும் இந்தத் தகவல் இல்லை.
முதல் தகவல் அறிக்கையின்(FIR) படி மருத்துவமனை வளாகத்திலேயே பல மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இப்போது ஏறக்குறைய ஒரு மாதமாகிவிட்ட நிலையில் இவர்களைக் குறித்த எந்த ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படவில்லை.
இவர்களின் கைது குறித்து கூடுதலாக எந்தத் தகவல்களையும் வெளியிடாத ஊடகங்கள் இவர் ஒரு பாகிஸ்தானி என்றும் மேலும் இதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மற்ற பாகிஸ்தானிய மருத்துவர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இவர்கள் அனைவரும் அகமதாபாத்தில் மட்டுமே வேலை பார்க்கும் உரிமம் பெற்றவர்களாம். அப்பல்லோ புறநகர்ப்பகுதியில் அமைந்திருப்பதால் இவர்கள் வேலை பார்ப்பது சட்டப்பூர்வமாகாதாம். பிரச்சினையை திசைதிருப்ப இதைவிட என்ன வேண்டும்? மேலும் பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கண்ணீர் விடும் ஊடகங்கள் இங்கே ஒரு பாகிஸ்தான் இந்து, டாக்டராக வேலை பார்ப்பதை ஏன் மறைக்க வேண்டும்?
டாக்டர்.ரமேஷ் செளஹான் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதோடு சிந்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு இந்து! ஒருவேளை அதே சிந்தி சமூகத்தைச் சேர்ந்த மற்றும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பாஜக-வின் மூத்த தலைவர் அத்வானியின் உறவினராகக்கூட இருக்கவும் வாய்ப்புண்டு.
’உலகத்தரம்’-வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனை - அகமதாபாத்
’உலகத்தரம்’-வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனை – அகமதாபாத்
அப்பல்லோ மருத்துவமனையின் உலகத்தரம் குறித்தோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்து வரும் மருத்துவர்களின் தரம் குறித்தோ இந்த ஊடகங்கள் ஆராய்வதில்லை. தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், முறையான கல்வித்தகுதி எதுவுமின்றி, எஸ்.ஆர்.எம்(SRM) போன்ற தனியார் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் காசைக் கொட்டி,பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர். ரமேஷ் செளஹானும் இவர்களில் ஒருவராகத் தான் இருக்க முடியும். இதில் பாகிஸ்தானி, இந்தியர் என்ற வேறுபாடு இல்லை.
அதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பாதிக்கப்படுமா? நிச்சயமாக இல்லை. அதிகாரத்தில் இருப்போரை அண்டிப் பிழைக்கும் அப்பல்லோ நிர்வாகம் அவர்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களை வேறு மாதிரியாகவும்தான் நடத்தும்.
உள்ளே நுழைந்தால் உலகத்தரம், உயிருக்கு உத்திரவாதம் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளும் அப்பல்லோவின் தரம் இதுதான்!!!  வினவு.காம்

கருத்துகள் இல்லை: